ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு நாளை முதல் வினியோகம் விவசாயிகளிடம் கரும்பு கொள்முதல்




பொங்கல் பண்டிகை வருகிற 14-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடும் வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க கூட்டுறவுத்துறை அதிகாரிகளும், பொது வினியோக திட்ட அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு, வீடாக டோக்கன் வழங்கும் பணி தொடங்கி முடிவடைந்தது. ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நபர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. அந்தந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைகளுக்கு பொதுமக்கள் சென்று பெற்றுக்கொள்ளலாம்.

கரும்பு கொள்முதல்

ஒரு நாளைக்கு 200 பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. காலை 100 நபர்கள், மாலை 100 நபர்கள் என பிரிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் வருகிற 12-ந் தேதிக்குள் வழங்கி முடிக்கவும், விடுபட்ட அரிசி பெறும் மின்னணு குடும்ப அட்டைதாரர்களுக்கு வருகிற 13-ந் தேதி அன்று வழங்கிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 லட்சத்து 63 ஆயிரத்து 988 அரிசி பெறும் மின்னணு குடும்ப அட்டைதாரர்களுக்கு (இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் குடும்பங்கள் உட்பட) தமிழக அரசால் வழங்கப்பட உள்ளது.

இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் முழு கரும்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் துண்டு கரும்பு வினியோகிக்கப்பட்டன. இந்த ஆண்டு முழு கரும்பு என்பதால் விவசாயிகளிடம் இருந்து கரும்புகளை கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கொள்முதல் செய்துள்ளனர். மாவட்டத்தில் ஆங்காங்கே உள்ள கரும்பு தோட்டத்தில் இருந்து கரும்புகளை அறுவடை செய்யும் பணி நடந்து வருகிறது. அங்கிருந்து ரேஷன் கடைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. புதுக்கோட்டை அருகே செல்லுக்குடி பகுதியில் அறுவடை செய்யப்பட்ட கரும்புகளை டிராக்டரில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டன.

ஆதார் அட்டை

ரேஷன் கடைகளில் நாளை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிட பொருட்கள் அனைத்தும் கூட்டுறவு துறை மூலம் பொட்டலமிடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடித்து பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்றிட அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். மின்னணு குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களில் எவர் சென்றாலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு நியாய விலைக் கடையில் வழங்கப்படும்.

ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு நபர் மட்டுமே பொருள் பெற்று செல்ல வர வேண்டும். மின்னணு குடும்ப அட்டைகள் தொலைந்து போன இனங்களுக்கு அக்குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர் எவரேனும் ஒருவரின் ஆதார் அட்டையினை வைத்தோ அல்லது பதிவு செய்யப்பட்ட அலைப்பேசியில் பெறப்படும் கடவுச் சொல்லை கொண்டோ பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை பெற்றுக்கொள்ளலாம் என பொதுவினியோக திட்டத்தினர் தெரிவித்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments