கோட்டைப்பட்டினம் அருகே பயங்கரம்: காரும் லாரியும் நேருக்கு நேர் மோதல்.. 3 போ் உயிரிழப்பு..



கோட்டைப்பட்டினம் அருேக கார், லாரி நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் 3 பேர் பலியாகினர். 5 பேர் படுகாயமடைந்தனர். மீன்பிடி வலை வாங்கிக்கொண்டு ஊருக்கு திரும்பிய போது இந்த துயர சம்பவம் நடந்தது.

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தை அடுத்த ஒடவிமடம் அருகே நேற்று இரவு பயங்கர சத்தம் கேட்டுள்ளது. சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்த போது, அங்கு காரும், லாரியும் நேருக்கு நேர் மோதி கிடந்தது. காரில் இருந்தவர்கள் அபய குரல் எழுப்பினர். 

இதையடுத்து அங்கிருந்தவர்கள் கோட்டைப்பட்டினம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார், தீயணைப்பு துறையினர் பொதுமக்கள் உதவியுடன் காரில், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.

அதில் காரில் பயணம் செய்த 8 பேர்களில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். காயமடைந்த 5 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் 2 பேர் மட்டும் மேல் சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து முதல்கட்ட விசாரணையில், காரில் வந்தவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் என்றும், அவர்கள் நாகை மாவட்டம், கோடியகரை பகுதிக்கு மீன்பிடி வலை வாங்க சென்று விட்டு ஊர் திரும்பும் போது விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் தெரிகிறது. விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதற்கிடையே கோட்டைப்பட்டினம் போலீசார் விபத்து நடந்த இடத்திற்கு சென்று பலியான 3 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பலியானவர்கள் ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் முகாமை சேர்ந்த கிளிட்டஸ் (வயது 39), தங்கச்சி மடத்தை சேர்ந்த ஆரோக்கியம் (41), மண்டபம் முகாமை சேர்ந்த சேசு பிள்ளை (19) என்பது தெரியவந்தது. மேலும் அதே காரில் இருந்த தங்கச்சி மடத்தைச் சேர்ந்த எஸ்.சன்ராஜ்(45), எஸ்.பிராங்கிளின்(40), ஏ.கிரீன்சன்(33),  ஆர்.ஜான்சன்(56), ஆர்.பாக்கியராஜ்(48) ஆகிய 5 பேரும் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து கோட்டைப்பட்டினம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments