புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும்பாலான அரசு பஸ்கள் நேற்று (பிப்ரவரி 25) இயங்கவில்லை





அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் 14-வது ஊதிய ஒப்பந்தத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என்பன உள்பட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி, நேற்று தமிழகம் முழுவதும் போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இதேபோல புதுக்கோட்டை மாவட்டத்திலும் தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலை நிறுத்த போராட்டத்தால் புதுக்கோட்டையில் நேற்று காலை சில பஸ்கள் மட்டும் இயங்கின. அதன்பின் படிப்படியாக குறைந்து சொற்ப அளவிலான அரசு பஸ்கள் மட்டும் இயங்கின. அதன்படி நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தமுள்ள 385 பஸ்களில் 25 பஸ்கள் மட்டுமே போலீஸ் பாதுகாப்போடு இயக்கப்பட்டன. மற்ற பஸ்கள் அந்தந்த போக்குவரத்து பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆனால், தனியார் பஸ்கள் வழக்கம்போல இயங்கின. இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் தொ.மு.ச, சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி.யூ.சி, டி.டி.எஸ்.எப், எ.எ.எல்.எப். உள்ளிட்ட போக்குவரத்து கழக சங்கங்கள் பங்கேற்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 2,553 போக்குவரத்து ஊழியர்களில் 90 சதவீதம் பேர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பெரும்பாலான அரசு பஸ்கள் இயங்காததால் புதுக்கோட்டையில் இருந்து வெளியூர் செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் தவித்தனர். இதனால், தனியார் பஸ்களில் கூட்டம் அதிகமாவே இருந்தது. இதுகுறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் சிலர் கூறுகையில், போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தரக்கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி விட்டோம். ஆனால், தமிழக அரசு அதற்கான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. இதனால்தான், அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு தற்போது வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளோம். போக்குவரத்து தொழிற்சங்கங்களை கலந்து ஆலோசிக்காமல் இடைக்கால நிவாரணம் ரூ.ஆயிரம் என்பது ஏமாற்று வித்தை, அந்த ரூ.ஆயிரம் ரூபாயை எந்த தேதியிலிருந்து வழங்கப்படும் என்று எந்தவிதமான விவரம் அறிவிக்கப்படவில்லை. தங்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் வரை வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என்றனர். மேலும் அவர்கள் கூறுகையில், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போக்குவரத்து தொழிலாளர்களை மிரட்டி பஸ்களை இயக்க நடவடிக்கை மேற்கொள்வதாக குற்றம் சாட்டினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments