புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரை அன்பால் நெகிழவைத்த நரிக்குறவர் சமூகத்தினர்!




புதுக்கோட்டையில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியில், நரிக்குறவர் சமூகத்தினர் தங்களது அன்புப் பரிசுடன் கூடிய வரவேற்பால் மாவட்ட ஆட்சியரை நெகிழவைத்தனர்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது. அதன் ஒரு பகுதியாக இன்று புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தியும், 'வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை; அதனால் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்; கையூட்டு பெறாமல் வாக்களிக்க வேண்டும்' என்பதை வலியுறுத்தி தப்பாட்டம், கரகாட்டம், கட்டைக்கால் ஆட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

மேலும், பெரிய அளவில் தயாரிக்கப்பட்ட வாக்குப்பதிவு மாதிரி இயந்திர வாகனத்தை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தொடங்கி வைத்து, பேருந்து நிலையத்தில் இருந்த மக்களுக்கு துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்து, வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

அப்போது அந்தப் பகுதியில் ஊசி, பாசி மணி விற்பனை செய்துகொண்டிருந்த நரிக்குறவர் சமூக மக்கள், மாவட்ட ஆட்சியருக்கு தாங்கள் செய்த பாசிமணிகளை ஒவ்வொருவராக வரிசையாக அணிவித்து மகிழ்ந்தனர்.‌ இதனால், ஆட்சியர் நெகிழ்ச்சியில் அந்த அன்பில் திக்குமுக்காடினார்.


பின்னர், விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியது. இதில் நகராட்சிப் பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதாகைகளை ஏந்தி ஊர்வலமாகச் சென்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments