புதுக்கோட்டை மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரம் விற்றால் உரிமம் ரத்து! வேளாண்மை இணை இயக்குனர் எச்சரிக்கை!!



கூடுதல் விலைக்கு உரம் விற்றால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று வேளாண்மை இணை இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் உள்ளிட்ட இதர பயிர்களுக்கு தேவையான உரங்களான யூரியா 3,466 மெட்ரிக்டன், டி.ஏ.பி. 626 மெட்ரிக்டன், பொட்டாஸ் 1,721 மெட்ரிக்டன், காம்ப்ளக்ஸ் 2,949 மெட்ரிக்டன் ஆகிய உரங்கள் தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அனைத்து உர விற்பனை நிலையங்களிலும் கடந்த ஆண்டு விலையிலேயே தற்போதும் டி.ஏ.பி., பொட்டாஷ், சூப்பர் பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் விற்பனை செய்யப்பட வேண்டும் என மத்திய உரத்துறை தெரிவித்துள்ளது.

எனவே உரங்களை கூடுதல்விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுவது மட்டுமின்றி விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும். மானிய விலை உரங்களை விற்பனை செய்ய முனையக்கருவி மூலம் விவசாயிகளின் ஆதார் எண் மூலமே விற்பனை செய்ய வேண்டும். 

உரங்களின் இருப்பு மற்றும் விலை விவரங்கள் அடங்கிய தகவல்பலகை தவறாமல் பராமரிக்கப்பட வேண்டும். உர மூட்டைகளில் குறிப்பிட்டுள்ள அதிகபட்சவிலைக்கு மிகாமல் உரங்களை விற்பனை செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு உரங்களை விற்பனை செய்யும் போது உரிய ரசீது வழங்க வேண்டும்.
இருப்பு பதிவேட்டில் உரங்களின் இருப்பு விவரங்கள் சரியாக பராமரிக்கப்பட வேண்டும். 

அதிக விலைக்கு விற்பனை செய்வது தொடர்பாக புகார் ஏதும் பெறப்பட்டாலோ, உரிய ஆவணமின்றி உர விற்பனை செய்தல் போன்ற நிகழ்வு ஆய்வின்போது கண்டறியப்பட்டால் உர கட்டுப்பாட்டு ஆணை 1985 -ன் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதனை மீறுபவர்களின் உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும். இந்த தகவலை புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குனர் ராம.சிவகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments