புதுக்கோட்டை: நிதி நிறுவனத்தில் ஊழியர்களே செய்த மெகா மோசடி - தணிக்கையில் வெளிவந்த உண்மை





புதுக்கோட்டையில் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்த மேலாளர் உள்ளிட்ட மூன்று பணியாளர்கள் அதே நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்திருந்த ரூ.91 லட்சத்து 68 ஆயிரத்து 750 ரூபாய் மதிப்பிலான 305.625 சவரன் தங்க நகைகளை கையாடல் செய்து மற்றொரு தனியார் நிதி நிறுவனத்தின் மேலாளருடன் கூட்டு சதியில் ஈடுபட்டு அந்த நிறுவனத்தில் அடகு வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
புதுக்கோட்டை தெற்கு 4ஆம் வீதியில் கடந்த 7 ஆண்டுகளாக எச்டிபி என்ற தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளர்களுக்கு நகைக் கடன் மற்றும் தனிநபர் கடன்கள் வழங்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இந்த தனியார் நிதி நிறுவனத்தில் தற்போது ஆண்டு தணிக்கை நடைபெற்றுள்ளது. அப்போது தனியார் நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்திருந்த ரூ.91 லட்சத்து 68 ஆயிரத்து 750 ரூபாய் மதிப்பிலான 305.625 சவரன் தங்க நகைகள் இருப்பில் இல்லாமல் இருப்பது தெரிய வந்துள்ளது.



இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த தனியார் நிதி நிறுவன அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட போது அந்த நிறுவனத்தில் பணியாற்றிய 3 பேர் இந்த கையாடலில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்ததுள்ளது. இதனையடுத்து தங்களது நிறுவனத்துக்கு சொந்தமான சுமார் ஒரு கோடி மதிப்பிலான நகைகளை திருடி கையாடல் செய்ததாக அந்த நிறுவனத்தின் திருச்சி மண்டல மேலாளர் ராஜேஷ் அளித்த புகாரின் பேரில், புதுக்கோட்டை கிளை அலுவலகத்தில் தங்க நகை கடன் பிரிவில் பணியாற்றிவரும் சோலைமணி (37), தனிநபர் கடன் பிரிவில் பணியாற்றிவரும் முத்துக்குமார் (28), கிளை மேலாளர் உமாசங்கர் (43) ஆகிய 3 பேர் மீது புதுக்கோட்டை கணேஷ் நகர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் மூவரையும் கைது செய்து விசாரணையை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர்கள் கையாடல் செய்த நகைகளை புதுக்கோட்டை பழனியப்பா கார்னரில் உள்ள இன்டல் மணி என்ற மற்றொரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் மேலாளர் மாரிமுத்து மற்றும் பெண் ஊழியர் ஒருவர் உதவியுடன் அதே நிறுவனத்தில் 77 முறை சிறுக சிறுக கடந்த 2019 டிசம்பர் மாதம் முதல் அடகு வைத்து இருப்பது தெரியவந்தது. மேலும் ஒவ்வொரு முறையும் எச்டிபி தனியார் நிதி நிறுவனத்திற்கு ஆடிட்டிங் வரும்போது முன்கூட்டியே தகவல் தெரிந்ததால் அடகு வைக்கப்பட்ட நிதி நிறுவனத்திலிருந்து அந்த சமயம் மட்டும் நகைகளை வாங்கி வந்து ஆடிட்டிங் வருபவர்களிடம் காட்டிவிட்டு பின்னர் மீண்டும் கொண்டு சென்றுள்ளனர். தற்போது எந்த ஒரு தகவலும் சொல்லாமல் திடீரென ஆடிட்டிங் வந்ததால் நகை கையாடல் செய்தது தெரிந்து விட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.



 
இதனையடுத்து கைது செய்யப்பட்ட மேலாளர் உமா சங்கர் உள்ளிட்ட மூன்று பேரையும் அழைத்துக்கொண்டு நகைகளை அடகு வைத்த மற்றொரு தனியார் நிதி நிறுவனத்திற்கு சென்ற போலீசார் நகைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இது தொடர்பாக நகை அடகு வாங்கிய இண்டல் மணி நிதி நிறுவனத்தை சேர்ந்த மேலாளர் மாரிமுத்துவையும் போலீசார் கைது செய்துள்ள நிலையில் இதற்கு உடந்தையாக இருந்த அந்த நிறுவனத்தைச் சேர்ந்த பெண் ஊழியர் ஒருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது வரை போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ஹெச்டிபி நிதி நிறுவனத்தின் மேலாளர் உமாசங்ரும், இன்டல் மணி நிதி நிறுவனத்தின் மேலாளர் மாரிமுத்தும் கூட்டு சதியில் ஈடுபட்டு ஒருவர் கையாடல் செய்த நகைகளை அடகு வைத்ததும் மற்றொருவர் அதனை தெரிந்தே அடகு வாங்கியதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து இரு தனியார் நிதி நிறுவனங்களின் மேலாளர்கள் உட்பட 4 பேரையும் கைது செய்துள்ள போலீசார் தற்போது இந்த மணி நிதி நிறுவனத்தில் அடகு வைக்கப்பட்ட நகைகளை மீட்டு வருகின்றனர்.

புதுக்கோட்டையில் இரு தனியார் நிதி நிறுவனங்களை சேர்ந்த 4 பேர் வாடிக்கையாளர்களின் ஒரு கோடி மதிப்பிலான நகைகளை மோசடியாக ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்தில் அடகு வைத்த சம்பவமும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இது தனியார் நிதி நிறுவனங்களின் மேலாளர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments