அம்மாபட்டினத்தில் கொடுத்த கடனை திரும்ப கேட்டு தொந்தரவு; பெண் தற்கொலை - வட்டிக்கடைக்காரர் கைது!!



அம்மாபட்டினத்தில் கொடுத்த கடனை கேட்டு தொந்தரவு செய்ததால் பெண் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக வட்டிக்கடைக்காரரை  போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியை அடுத்த அம்மாபட்டினம் வடக்கு தெருவை சேர்ந்தவர் செய்யது அபுதாகீர். இவரது மனைவி பவுசியா பேகம் (வயது 35). இதேபோல் மணமேல்குடி அந்தோணியார்புரத்தை சேர்ந்தவர் லியோ லாரன்ஸ் (45). இவர் மணமேல்குடியில் வட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் பவுசியா பேகம், லியோ லாரன்சிடம் ரூ.18 லட்சம் கடன் வாங்கி இருந்தார். இதற்கு மாதந்தோறும் வட்டியை செலுத்தி வந்தார். இதற்கிடையில் கொரோனா ஊரடங்கு காரணமாக  வட்டியை அவரால் செலுத்த முடியவில்லை. மேலும் அவர் வட்டி பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதன்காரணமாக லியோ லாரன்ஸ் கொடுத்த கடன் மற்றும் வட்டி கேட்டு அடிக்கடி பவுசியா பேகத்தை தொந்தரவு செய்து வந்துள்ளார். இதில் மனம் உடைந்த அவர் வீட்டிலிருந்த எலிமருந்தை (விஷம்) சாப்பிட்டு விட்டு மயங்கி கிடந்தார். இதைகண்ட அவரது கணவர் பவுசியா பேகத்தை மீட்டு சிகிச்சைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்குகொண்டு சென்றார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து செய்யது அபுதாகீர் மணமேல்குடி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வட்டிக்கடைக்காரர் லியோ லாரன்சை கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments