புதிய மீன்பிடி விசைப்படகு கட்ட 50 சதவீதம் மானியம்





அண்மைக்கடல் பகுதியில் அதிகரித்து வரும் மீன்பிடி அழுத்தத்தை குறைத்திடவும், ஆழ்கடல் பகுதியில் செறிந்துள்ள மீன்வள ஆதாரங்களை முறையாக பயன்படுத்திடவும், தூண்டில் மூலம் சூரை மீன்பிடிப்பு மற்றும் செவுள்வலை பயன்படுத்தும் புதிய மீன்பிடி விசைப்படகினை கட்டும் மீனவர்களுக்கான ஒரு புதிய திட்டத்தினை அறிவித்து தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், தூண்டில் மூலம் சூரை மீன்பிடிப்பு மற்றும் செவுள்வலை பயன்படுத்தும் புதிய மீன்பிடி விசைப்படகினை கட்டிட படகொன்றிற்காகும் செலவினத்தில் 50 சதவீதம் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை மீனவர்களுக்கு மானியமாக வழங்கப்படும். தமிழகத்தை சேர்ந்த முழு நேர மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் அதிகபட்சம் 6 பேர் கொண்ட குழுவாகவோ அல்லது மீனவர் கூட்டுறவு சங்கங்கள் அல்லது தனி நபராகவோ இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம். இதற்கான விண்ணப்பப் படிவங்களை மீன்வளத்துறையின் இணையதளமான www.fisheries.tn.gov.in- லிருந்து கட்டணமின்றி பதிவிறக்கம் செய்யலாம். அல்லது விண்ணப்ப படிவங்களை மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் அலுவலக நாட்களில் நேரில் விலையின்றி பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ‘‘மீன்வளத்துறை ஆணையர், கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை ஒருங்கிணைந்த கட்டிடங்கள், 3-வது தளம், கால்நடை மருத்துவமனை வளாகம், 571 அண்ணா சாலை நந்தனம், சென்னை -600 035’’ என்ற முகவரிக்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ அடுத்த ஆண்டு (2022) பிப்ரவரி மாதம் 14-ந் தேதி வரை அளிக்கலாம். விண்ணப்பத்துடன் கட்டுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள சூரைமீன்பிடி படகின் வரைபடம் தகுதிவாய்ந்த கப்பல், மீன்பிடிகலன் கட்டுமான வரைவாளரிடமிருந்து பெற்று அசலாக கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும். பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு மாநில அளவிலான பதிவு எண்ணுடன் கூடிய ஒப்புகை சீட்டு விண்ணப்பதாரருக்கு அனுப்பப்படும். மேலும் கூடுதல் விபரங்களுக்கு புதுக்கோட்டையில் உள்ள மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம் என கலெக்டர் கவிதாராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments