பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு இனி ரூ.500 அபராதம்: தமிழக அரசு அரசாணை வெளியீடு





தமிழ்நாட்டில் பொது இடங்களில் மாஸ்க் அணியாதவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் ரூ.200லிருந்து ரூ.500ஆக அதிகரிப்பு

பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கான அபராதம் ரூ.200 என்பதில் இருந்து ரூ.500 என அதிகரித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்காலத்தில் தொற்று பரவல் அதிகரிக்காமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் இதுகுறித்து பேசுகையில், “ஒமைக்ரான் வேகமாக பரவும் நிலையில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். அடுத்த சில நாட்களுக்கு மக்கள் கவனமாக இருக்க வேண்டும். கட்டாயம் முகக் கவசம் அணிந்தால், நோய் பரவலின் தீவிர தன்மை குறையும்” என பேசினார்.

இன்று காலை நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், “டெல்டா வைரஸ் பாதிப்பின்போது 25-30% வரை மருத்துவமனை வசதி தேவைப்பட்டது. ஒமைக்ரான் பாதிப்பில் 5 - 10 வரைதான் மருத்துவமனை வசதி தேவைப்படுகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பாதிப்பு குறைவாக உள்ளது. இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும். கோவாக்ஸின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் தமிழகத்தில் போதுமான அளவு உள்ளது. மேலும் கூடுதல் தடுப்பூசி கோரி மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம்” என குறிப்பிட்டார் அவர். 

மேலும், “சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட தொந்தரவு தெரியவந்தால் அவர்கள் கட்டாயம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஒமைக்ரான் மூக்கு மற்றும் தொண்டையில்தான் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதால், யாரும் அலட்சியம் காட்டக் கூடாது” என்றும் அவர் வலியுறுத்தினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments