திருச்சி - புதுக்கோட்டை சாலை விரிவாக்கப் பணி: விமான நிலைய சுற்றுச்சுவரை அகற்றாததால் விபத்து அபாயம்






திருச்சி: திருச்சி- புதுக்கோட்டை சாலை விரிவாக்கப் பணியில், விமானநிலைய சுற்றுச்சுவரை அகற்றுவதில் சிக்கல் இருப்பதால், அந்தப் பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், எனவே இதற்கு மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் டிவிஎஸ் டோல்கேட் முதல் மாத்தூர் பகுதியில் உள்ள அரை வட்ட சுற்றுச்சாலை வரை விரிவாக்கம் செய்ய ரூ.68 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த 2020 டிசம்பர் மாதம் பணிகள் தொடங்கின.

இதில், மாத்தூர் அரை வட்ட சுற்றுச்சாலை முதல் விமானநிலையம் வரை சாலைகளின் இருபுறமும் 3 மீட்டர் அளவுக்கு அகலப்படுத்தும் பணிக்காக பள்ளங்கள் தோண்டப்பட்டு ஜல்லிக்கற்கள் நிரப்பட்டுள்ளன.

மேலும், 4 பெரிய, 8 சிறிய பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் விமானநிலையம் முதல் டிவிஎஸ் டோல்கேட் வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால் முதற்கட்டப் பணிகள் கூட தொடங்கப்படவில்லை.


மேலும், இந்த சாலையில் விமானநிலையத்தின் சுற்றுச்சுவரை அகற்றுவதில் சிக்கல் உள்ளதால், அப்பகுதியில் கிழக்குப்புறம் 276 மீட்டர் தொலைவுக்கு சாலையை அகலப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி, இந்தப் பகுதியில் மட்டும் சாலையை அகலப்படுத்தாமல் இருந்தால், அதிகளவில் விபத்துகள் நடக்க வாய்ப்புள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.

மேற்கு பகுதியில்...

இதுகுறித்து வயர்லெஸ் சாலை பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் கூறுகையில், திருச்சி-புதுக்கோட்டை சாலையின் இருபுறமும் 3 மீட்டர் அகலப்படுத்தப்பட்டு வரும் நிலையில், விமானநிலைய சுற்றுச்சுவரை அகற்றாமல் இருந்தால், அப்பகுதியில் மட்டும் சாலை குறுகலாக இருக்கும். இதனால், அவ்வழியாக வரும் வாகனங்கள் கவனக்குறைவால் நிச்சயம் விமானநிலைய சுற்றுச்சுவரில் மோதி விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இதை தவிர்க்க வயர்லெஸ் சாலை பகுதியிலிருந்து மேற்கு புறத்தில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் கூடுதலாக 3 மீட்டர் விரிவாக்கம் செய்யலாம் என்றார்.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தற்போது நடைபெற்று வரும் திருச்சி -புதுக்கோட்டை சாலை விரிவாக்கப்பணியின்போது ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. புதிதாக நிலம் கையகப்படுத்த முடியாது. இதனால், அப்பகுதியில் விரிவாக்கப் பணி செய்ய ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு தனியார் இடத்தை கையகப்படுத்த வேண்டி இருக்கும். ஆனால், தற்போது அதற்கு சாத்தியம் இல்லாததால், மேற்கு பகுதியில் கூடுதலாக சாலையை அகலப்படுத்த முடியாது.

விமானநிலையம் பகுதியில் ஒருபுறம் சாலையை அகலப்படுத்தாமல் இருப்பதால், விபத்து நடக்க வாய்ப்புள்ளது என்பது உண்மை தான். இதற்கு மாற்று ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறோம்’’ என்றார். 
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments