பொன்னமராவதி அருகே தொண்டைமான் மன்னர்-ஆங்கிலேயர் இடையே எல்லை அமைத்தது தொடர்பான கல்வெட்டு கண்டெடுப்பு






பொன்னமராவதி அருகே தொண்டைமான் மன்னர்-ஆங்கிலேயர் இடையே எல்லை அமைத்தது தொடர்பான கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. 

கல்வெட்டு கண்டெடுப்பு

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம் நகரப்பட்டி உடைகுளம் வயலில் ஆங்கிலேயர்-தொண்டைமான் மன்னர் இடையே எல்லை அமைத்தது தொடர்பான கல்வெட்டு இருந்துள்ளது. இதனை செவலூர் ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் சரவணன் அளித்த தகவலின்பேரில், புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் மணிகண்டன், தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் மேற்கொண்ட கள ஆய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் மணிகண்டன் கூறுகையில், ''புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்கள் மற்றும் ஆங்கிலேயர் இடையே இணக்கமான உறவு இருந்தது. இதனால் இந்திய ஆட்சிப்பிரதேசத்தில் புதுக்கோட்டை சமஸ்தானம் செயல்பட ஆங்கிலேய அரசு அனுமதித்திருந்தது. தொண்டைமான் ஆட்சிப்பகுதி எல்லை உள்ளிட்டவற்றை தெளிவாக வகுத்ததன் மூலம் எவ்வித முரண்பாடுகளுக்கும் இடம் கொடுக்காமல் இரு தரப்பு அரசுகளும் செயலாற்றியதை தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள கல்வெட்டு வெளிப்படுத்துகிறது.

 இணக்கமான சூழல்

 இந்த கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள செய்தி குறிப்பின்படி 1822-ம் ஆண்டு மதுரை கலெக்டர் மேஸ்தர் சுபிதார் என்பவரின் உத்தரவின்படி திருச்சி மாவட்டம், மருங்காபுரி தாலுகாவை சேர்ந்த கலிங்கப்பட்டி கிராமத்திற்கும், புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர் ஆட்சி பகுதியில் உள்ள கல்லம்பட்டி கிராமத்திற்கும் எல்லை நிர்ணயம் செய்து எல்லை கல் நடப்பட்டதாக தெரிவிக்கிறது. புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் இணக்கமான சூழல் இருந்ததையும் ராஜா விஜய ரகுநாத ராய தொண்டைமான் (1807-1825) ஆட்சி காலத்தின் போது இக்கல்வெட்டு நடப்பட்டுள்ளது என்பதையும் வெளிப்படுத்துகிறது'' என்றார். இந்த கள ஆய்வின் போது உள்ளூர் பிரமுகர்கள் உடனிருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments