திருக்குறள் முற்றோதலுக்கு மாணவ, மாணவியர்கள் 25.11.2022 -க்குள் விண்ணப்பிக்கலாம்.! மாவட்ட ஆட்சியர் தகவல்!!



திருக்குறள் முற்றோதலுக்கு மாணவ, மாணவியர்கள் 25.11.2022 -க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

உலகப் பொதுமறையாம் திருக்குறளில் உள்ள கருத்துக்களை மாணவ மாணவியர் அறிந்து கொண்டு கல்வி அறிவுடன் நல்ல ஒழுக்கம் மிக்கவர்களாக விளங்கச் செய்யும் வகையில் 1,330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் திறன்பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கு ரூ.10000/- பரிசுத்தொகையும் பாராட்டுச் சான்றிதழும் ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின்கீழ் 2022-23ஆம் ஆண்டிற்கு மாணவ மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முற்றோதலில் பங்கேற்கும் மாணவ மாணவியர் 1,330 குறட்பாக்களையும் ஒப்புவிக்கும் திறன் பெற்றவர்களாக இருத்தல் வேண்டும். திருக்குறளில் உள்ள இயல் எண், அதிகாரம், குறள் எண், குறளின் பொருள், திருக்குறளின் அடைமொழி, சிறப்புகள், சிறப்புப் பெயர்கள், உரை எழுதியோர் போன்றவற்றை அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாகப் கொள்ளப்பெறும்.

முற்றோதலில் பங்கேற்கும் மாணவ மாணவியர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள திறனறி குழுவின் முன்னிலையில் நேராய்வுக்கு உட்படுத்தப்பட்டு குறள் பரிசுக்குரியோர் பட்டியல் சென்னை, தமிழ் வளர்ச்சி இயக்குநருக்கு புதுக்கோட்டை மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநரால் பரிந்துரைக்கப்படும். ஏற்கனவே இம்முற்றோதலில் பங்கேற்று பரிசு பெற்றவர்கள் மீண்டும் கலந்து கொள்ள இயலாது. திருக்குறள் முற்றோதலுக்கான விண்ணப்பங்களை புதுக்கோட்டை மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் https://tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதளத்திலோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கூடுதல் விவரங்களுக்கு 04322-228840 (9952280798) என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பெற்ற விண்ணப்பங்களை மாணவ மாணவியர் 25.11.2022ஆம் தேதிக்குள் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகம், முதல் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், புதுக்கோட்டை - 622005. புதுக்கோட்டை மாவட்டம். (மின்னஞ்சல் முகவரி: pdkttamilthai@gmail.com) என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ அனுப்பி வைத்தல் வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments