இராமநாதபுரம் - மண்டபம் இடையே ரெயில் பாதையை மின்மயமாக்கும் திட்டப்பணிகள் தாமதம்




மதுரை-ராமநாதபுரம் இடையே ரெயில் மின்வழிப்பாதை பணிகள் முடிந்து ரெயில்கள் சென்றுவரும் நிலையில் ராமநாதபுரம் மண்டபம் இடையேயான மின்மயமாக்கும் பணிகள் தொடங்கப்படாமல் தாமதமாகி வருகிறது.

மின்பாதை

பாரதபிரதமர் மோடியின் கனவு திட்டமாக நாடு முழுவதும் உள்ள ரெயில் பாதை அனைத்தும் மின்மயமாக்கப்பட்டு வருகின்றன. இதன்படி மதுரை கோட்டத்தில் உள்ள அனைத்து வழித்தடங்களையும் மின்மயமாக்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. குறிப்பாக மதுரை - ராமேசுவரம் இடையேயான 161 கிலோ மீட்டர் ரெயில்பாதை மின்பாதையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு முதல் கட்டமாக மதுரை - மானாமதுரை இடையே 47 கிலோ மீட்டர் ரெயில்பாதை மின்பாதையாக மாற்றி முடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மானாமதுரை - மண்டபம் இடையேயான 96 கிலோ மீட்டர் தூரத்திலான ரெயில்பாதை மின்பாதையாக மாற்றும் பணி தொடங்கியது. 9.5 மீட்டர் உயரம் முதல் 10.6 மீட்டர் உயரத்திலான மின்கம்பங்கள் அமைத்து மின்சார கேபிள்கள் பதிக்கும் பணி ராமநாதபுரம் வரை முடிவடைந்து அதிர்வுகளை தாங்கும் வகையிலான புதிய தண்டவாளங்கள் மாற்றப்பட்டன.

சோதனை ஓட்டம்

மானாமதுரை முதல் ராமநாதபுரம் வரையிலான இந்த 60 கிலோ மீட்டர் மின்பாதை பணியில் 18 மீட்டர் இடை வெளியில் மொத்தம் 257 மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி தற்போது மின்பாதையில் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ராமநாதபுரம் வரை மின்வழிப் பாதையிலும் அதன்பின்னர் ராமேசுவரம் வரை டீசல் என்ஜினிலும் செல்லும் வகையில் மல்டி என்ஜின் பொருத்தப்பட்ட ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம் முதல் மண்டபம் வரையிலான பாதை மின்மயமாக்கும் பணி தொடங்கப்படும் என்றும் இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்பட்டது. ஆனால், ராமநாதபுரம் வரையிலான பணிகள் முடிவடைந்த பின்னர் மண்டபம் இடையேயான பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மாற்றுப்பாதை

இந்தநிலையில் ராமநாதபுரம் ரெயில்வே மேம்பால பணிகள் மற்றும் உச்சிப்புளி ரெயில்வே மாற்றுப்பாதை பணிகள் முடிவடைந்த பின்னர்தான் பணிகள் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மதுரை-ராமநாதபுரம் இடையே மின்வழிப்பாதைகள் விரைந்து முடிவடைந்த நிலையில் ராமநாதபுரம் மண்டபம் இடையேயான பணிகள் தொடங்குவதில் தாமதம் அடைந்து உள்ளதால் அதனை விரைவு படுத்த வேண்டும் என்று மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments