ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த குளங்கள்: புதுக்கோட்டை நீர்ப்பாசனத்தின் வரலாற்றை அறிந்து கொள்ள உதவும் கல்வெட்டுகள் தண்ணீர் பஞ்சம், கஞ்சித்தொட்டிகள் திறப்பு குறித்த அரிய தகவல்கள்




தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் புதுக்கோட்டைக்கு தனிச்சிறப்பு உண்டு. சமஸ்தானமாக விளங்கிய புதுக்கோட்டை நாடு சுதந்திரம் பெற்ற பின் ஓராண்டிற்கு பிறகு இணைக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தின் நீர்ப்பாசன வரலாறு குறித்து தொல்லியல் ஆய்வு கழகத்தினர் ஆராய்ந்துள்ளனர். இது குறித்து தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் மணிகண்டன் கூறியதாவது:-

புதுக்கோட்டையில் வெள்ளாறு, பாம்பாறு, அக்னியாறு, அம்புலியாறு ஆகிய ஆறுகளும், 3,943 குளங்களும் இவற்றில் 139 குளங்கள் தலா 200 ஏக்கர் பாசன வசதியளிப்பவையாகவும் உள்ளன. இதை விடவும் அதிகமாக 500 ஏக்கர் பாசன வசதி (ஆயக்கட்டு) கொண்டவைகளாக இரும்பநாடு பெரிய கண்மாய், மிரட்டுநிலை பெரிய கண்மாய், கவிநாடு பெரிய கண்மாய், வல்லநாடு பெரிய கண்மாய், ரகுநாதபுரம் காரைக்குளம், செம்பாட்டூர் பெரிய குளம், அன்னவாசல் பெரிய குளம், பெருமாநாடு பெரியகுளம், வயலோகம் பெரிய குளம் ஆகியன உள்ளன. இவையனைத்தும் மாவட்டத்தின் ஆறுகளோடு சங்கிலித்தொடர் வரிசையில் இணைக்கப்பட்ட நீர்பிடிப்பு பகுதிகளாக இருந்து வருகின்றன.

கல்வெட்டுகள்

குறிப்பாக வெள்ளாற்றோடு இணைந்த நீர் பாசன குளங்களின் எண்ணிக்கை 1,166. இதன் மூலம் 828 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பு பாசன வசதி பெற்றுள்ளதும், அக்னி ஆற்றோடு 710 குளங்களும், பாம்பாறு மூலம் 543, கோரையாறு மூலம் 429, காவிரி கடைமடையில் 230, அம்புலியாறு மூலம் 120, விருசுளியாறு மூலம் 236, மாமுண்டியாறு மூலம் 111, மணிமுத்தாறு மூலம் 47, மகாராஜா சமுத்திரம் மூலம் 88, திருநள்ளாறு மூலம் 23 குளங்கள் என 3,711 நீர்ப்பாசன குளங்கள் இருப்பதும் இவைகளில் பெரும்பாலானவை ஆயிரம் ஆண்டுகள் பழமையான வரலாற்றை கொண்ட குளங்களாக உள்ளன.

நீர்ப்பாசன முறை என்பது குளம் மட்டுமின்றி கிணற்று நீர் பாசனத்தை குறிப்பவையாக சமஸ்தான கல்வெட்டுகளில் ஏற்றத்தின் மூலம் நீர் இறைப்பது குறித்து “ஏத்த இறைவை என்று 305-வது கல்வெட்டிலும், ஏத்தக்கால் என்ற சொல்லுடன் 489, ஏத்தரம் என்ற சொல்லுடன் 156-வது கல்வெட்டுகளில் செய்தி பகிரப்பட்டுள்ளது.

தண்ணீர் பஞ்சம்

குளங்களில் உள்ள மடைகளில் அமைக்கப்பட்டுள்ள மடை பலகைக்கற்களில் குமிழி அமைத்த, அல்லது ஏரியை உருவாக்கியவர்களின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளன. இதில் மிக மூத்ததாக கி.பி. 872-ல் புதுக்கோட்டை கவிநாடு கண்மாய், மாறன் சடையன் என்கிற பாண்டியனின் ஆட்சியில் மூதாண்டி பெருந்திணை என்கிற வல்லநாடு பகுதியை நிர்வகித்த அரசு அதிகாரி இந்த மடையை உருவாக்கிய செய்தியும், கந்தர்வகோட்டை நொடியூர் மருதன் ஏரியை முதலாம் ஆதித்த சோழரின் ஆட்சிக்காலத்தில் மங்கல நல்லூர் ரணசிங்க முத்தரையன் குமிழி அமைத்துள்ள செய்தி அடங்கிய கல்வெட்டையும் கொண்டு நீர்ப்பாசனத்தில் உள்ளூர் நிர்வாக தொடர்பையும் அறிய முடிகிறது. புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்கள் கிராமப்புற விவசாயிகளுக்காக பல்வேறு நற்பணிகளை மேற்கொண்டுள்ளனர். 1858, 1871-ல் மிகக்கடுமையான தண்ணீர் பஞ்சமும், அதன் தொடர்ச்சியாக 1875-ம் ஆண்டு மழையின்மை காரணமாக விவசாயம் பொய்த்து போனதை தொடர்ந்து மக்கள் பொருட்களை வாங்க நிதியின்றியும், வேலையின்றியும் தவித்தனர்.

இதையடுத்து 1877-ல் சமஸ்தான மக்கள் வசிக்கும் முக்கிய பகுதிகளில் கஞ்சித்தொட்டிகளை திறந்தது. 1898-ம் ஆண்டு அக்னி ஆற்றில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டதோடு பல்வேறு கிராமங்களில் புதிய நீர்நிலைகள் ஏற்படுத்தப்பட்டது. அதிகமாக வறட்சியால் பாதிக்கப்பட்ட குளத்தூர் தாலுகா பகுதியில் அதிகபட்ச பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

புதிய குளங்கள்

1934-1935-ம் ஆண்டு விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்ததோடு விவசாயப்பணிகள் ஏதுமின்றி இருந்த மக்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில் பொதுப்பணிகளான கிணறு வெட்டுதல், குளங்களை சீர் செய்தல், புதிய குளங்களை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு மக்களை பஞ்சத்திலிருந்து மீட்க சிறப்பு நடவடிக்கை எடுத்தது. இதன்மூலம் புதிய கிணறுகள் 331, பழைய கிணறுகள் தூர்வாரப்பட்டவை 110, புதிய சின்னக்குளங்கள் 257, புதிய பெரிய குளங்கள் 21, ஊரணிகள் 19, புதிய சாலைகள், ஆழ்துளை கிணறுகள் 4 ஆகியவை புதிதாக ஏற்படுத்த பட்டது. இப்பணிகளை மேற்கொள்ள அரசு செலவு செய்த தொகை ரூ.3 லட்சத்து 63 ஆயிரத்து 672 ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

1 Comments

  1. செயற்கைக் கோள் வரைபடத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டுமே அதிக எண்ணிக்கையிலும், ஒன்றோடு ஒன்று இணைந்தும் எரிகள் மற்றும் குளங்கள் அமையப் பெற்றுள்ளன.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.