நாகப்பட்டினம் – தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலை புதிதாக பசுமை நான்கு வழி கடற்கரைச் சாலை அமைக்க மத்திய அரசு அனுமதி : தென் தமிழ்நாட்டின் புதிய பரிமாணம்






நாகப்பட்டினம் முதல் தூத்துக்குடி வரை புதிதாக பசுமை நான்கு வழி கடற்கரைச் சாலை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இத்திட்டம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

சாலைத் திட்டங்கள், பொருளாதார வளர்ச்சியை முன்னெடுக்கும் உந்துசக்தி என்றே கூறலாம். அதற்கு எடுத்துக்காட்டாக சரக்குப் போக்குவரத்தை மேம்படுத்துவதற்காகவும், துறைமுகங்களை இணைக்கும் விதமாகவும் சென்னையிலிருந்து தூத்துக்குடி வரை நான்கு வழி கடற்கரை சாலை அமைக்கப்படுகிறது.

இதில், நாகப்பட்டினம் முதல் தூத்துக்குடி வரை புதிய 4 வழி பசுமை கடற்கரை சாலை அமைக்கப்பட உள்ளது. மத்திய அரசின் பாரத் மாலா திட்டத்தின் கீழ் 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 313 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த கடற்கரைச் சாலை திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த புதிய பசுமை நான்கு வழி கடற்கரை சாலையில் 37 பெரிய பாலங்களும், 55 சிறிய பாலங்களும், 690 நீர்நிலைகளுக்கான சிறிய கால்வாய் நீரோடை பாலங்களும், 47 சிறிய சாலைகளும், அமைக்கப்பட உள்ளன.

இந்த திட்டத்தில் 90 விழுக்காடு பசுமைவழிச் சாலை என்பதால் விவசாயத்திற்கும், நீர் நிலைகளுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் அதிக அளவில் பாலங்கள் கட்டப்படவுள்ளன. இதற்கான விரிவான திட்டஅறிக்கையை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தயாரித்துள்ளது. இந்த சாலைத் திட்டம், பணிகள் முடிந்து செயல்வடிவம் பெறும்போது தொழிற்சாலைகள் விரைவான வளர்ச்சி அடையும் என கூறுகின்றனர் தொழிற்துறையினர்.

மேலும் நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் இந்த பசுமை வழிச்சாலையால் பெரிய அளவில் பயன் பெறுவார்கள், தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்வதற்கு இந்த புதிய நான்கு வழிச்சாலை ஒரு மாற்று வழிப் பாதையாகயும் அமையும் என இந்திய தொழில் வர்த்தக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சாலைத் திட்டத்துக்காக தூத்துக்குடியில் புதிய அலுவலகம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட செயலாக்கப் பிரிவு இயக்குனர் மற்றும் பொறியாளர்கள் உள்ளிட்டோர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இத்திட்டத்தை செயல்படுத்த முதற்கட்டமாக 11 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பூர்வாங்கப் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.

மேலும் இத்திட்டத்தை செயல்படுத்த நிலங்களை கணக்கீடு செய்து கையகப்படுத்தும் பணியை தொடங்குவதற்கு ஒரு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் 15 குழுக்கள் அமைக்கப்பட வேண்டும என்றும், இதற்கான அரசாணையை பிறப்பிக்க வேண்டும் என்று,ம் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது, அதன் அடிப்படையில், அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு நிலங்களை கையகப்படுத்த அதிகாரிகளை நியமித்த பின்னரே இத்திட்டத்துக்கு ஒப்பந்தம் விடப்பட்டு பணிகள் தொடங்கும். இந்த சாலைத் திட்டத்தின் மூலம் தென் தமிழ்நாட்டின் வளர்ச்சியில் மேலும் ஒரு பரிமாணம் ஏற்படும் என்றால் அது மிகையாகாது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments