கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த முகம்மது பாரூக் அவர்களின் பேரன்‌ புதுக்கோட்டையில் வசித்து வரும் மருத்துவ மாணவர் சேக் அப்துல்லா அவர்கள் சீனாவில் மரணம்




புதுக்கோட்டையைச் சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் ஷேக் அப்துல்லா  சீனா சென்றிருந்த நிலையில் அங்கு அவர் உயிரிழந்ததாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
    
புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த முகம்மது பாரூக் அவர்களின் பேரனும், புதுக்கோட்டை  டவுன் போஸ் நகரில் வசித்து வரும் கே.சையது அபுல் ஹசன் ஷாதலி(ராசி செப்பல்ஸ்) அவரது மகனார் மற்றும் ஃபாரூக் மளிகை முகமது மரைக்காயர் அவரது மருமகனார் (தங்கை மகன்) S.ஷேக் அப்துல்லாஹ் சீனாவில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்பை முடித்துவிட்டு அதே மருத்துவமனையில் மருத்துவராக பயிற்சி பெற்று வந்தார் ..


சீனாவில் மருத்துவ படிப்பு முடித்து பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் கடந்த 20 தினங்களுக்கு முன்பாக பயிற்சிக்காக சீனா சென்ற புதுக்கோட்டையைச் சேர்ந்த மருத்துவ மாணவர் ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு அங்கேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மாணவரின் சடலத்தையாவது சொந்த ஊருக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.


புதுக்கோட்டை போஸ் நகரை சேர்ந்த சையது அபுல்ஹாசன் என்பவரது மகன் ஷேக் அப்துல்லா. இவர் சீனாவில் உள்ள QIQIHAR MEDICAL UNIVERSITY பல்கலைக்கழகத்தில் 2017-18 ஆம் மருத்துவ படிப்பு படிக்க தொடங்கி தேர்ச்சியும் பெற்று விட்டார். கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு இருந்ததால் ஆன்லைன் மூலமாகவே கல்வியை கற்று முடித்த மாணவர் ஷேக் அப்துல்லா மருத்துவ பயிற்சிக்காக கடந்த 11-ஆம் தேதி மீண்டும் சீனா சென்றுள்ளார். பின்னர் அந்நாட்டின் விதிமுறைப்படி எட்டு நாட்கள் கொரோனாவின் காரணமாக தனிமைப்படுத்திக் கொண்ட ஷேக் அப்துல்லா அதன்பின் தனது யூனிவர்சிட்டிக்கு சென்றுள்ளார்.

இதன் பின் கடந்த ஒரு வாரத்திற்கு முன் ஷேக் அப்துல்லாவிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு அவர் ஹர்பன் சிட்டி மருத்துவமனையில் உள்ள ஐசியூவில் சிகிச்சை பெற்று வருவதாக அவரது பெற்றோருக்கு பல்கலைக்கழக நிர்வாகம் மூலம் தகவல் வந்துள்ளது.

தற்போது சீனாவில் மாறுபட்ட கொரோனா மிக வேகமாக பரவி வருவதால் பதட்டம் அடைந்த மாணவரின் பெற்றோர் அங்கு இருப்பவர்களை தொடர்பு கொண்டு பேசிய போது அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றும் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கான சிகிச்சை மருத்துவர்கள் மேற்கொண்டு வருவதாகவும் மருத்துவ செலவுக்கு தேவையான பணத்தை அனுப்பி வைக்குமாறு அங்கிருந்து கூறியுள்ளனர்.

இதனையடுத்து அவரது தந்தை சையது அபுல்ஹாசன் சாதலி தனது உறவினர்களிடம் கடன் வாங்கி ரூபாய் 6 லட்சத்து 40 ஆயிரத்தை அனுப்பி வைத்துள்ளார். தன் மகனை எப்படியாவது உயிருடன் ஊருக்கு அழைத்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த 26 ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடமும் அதன் பின் மத்திய, மாநில அரசுகளுக்கும் ஷேக் அப்துல்லாவின் பெற்றோர்கள் கோரிக்கை மனுவும் அனுப்பி இருந்தனர்.

இந்நிலையில் ஷேக் அப்துல்லா சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்து விட்டதாக சீன பல்கலைக்கழக நிர்வாக தரப்பில் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர்கள் மட்டுமின்றி அந்த போஸ் நகர் பகுதியே துயரில் ஆழ்ந்துள்ளது.

கூலி வேலை பார்த்து கடன் வாங்கி ஷேக் அப்துல்லாவின் பெற்றோர்கள் அவரை சீனாவில் மருத்துவம் படிக்க வைத்த நிலையில் தற்போது இறந்த மகனின் உடலை கூட சொந்த ஊருக்கு கொண்டு வர முடியாமல் அவரது பெற்றோர் தவிக்கும் காட்சி காண்போரையும் கண்கலங்க வைத்துள்ளது.

உடனடியாக மத்திய, மாநில அரசுகள் இப்பிரச்சனையில் தலையிட்டு இறந்த மாணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது இஸ்லாமிய முறைப்படி அங்கேயே அடக்கம் செய்ய வழிவகை செய்ய வேண்டும். அது மட்டும் இன்றி உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நிவாரண தொகையை வழங்கிட வேண்டும் எனவும் அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments