கூடுதலாக 15 ரூபாய் கட்டணம்‌ வசூலித்த கியாஸ் நிறுவனத்துக்கு ரூ.7,500 அபராதம் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு




கூடுதலாக கட்டணம் வசூலித்த கியாஸ் நிறுவனத்துக்கு ரூ.7,500 அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.

கியாஸ் நிறுவனம்

நாகர்கோவில் கோணம் வட்டகரையை சேர்ந்தவர் மேரி புஷ்பராணி. இவர் ஒரு தனியார் கியாஸ் நிறுவனத்திடம் கியாஸ் சிலிண்டர் முன்பதிவு செய்திருந்தார். பின்னர் கொடுத்த கட்டண ரசீதில் சிலிண்டரின் விலை ரூ.969 மற்றும் ரூ.15 ஆக மொத்தம் ரூ.984 என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் சிலிண்டரின் விலை, வரிகள் சேர்த்து ரூ.969 மட்டுமே. மேரி புஷ்பராணியிடம் ரூ.15 அதிகமாக பெற்றது நேர்மையற்ற வணிக நடைமுறையாகும். எனவே, ரூ.15-ஐ திருப்பி தர வேண்டுமென்று கியாஸ் நிறுவனத்திடம் மேரி புஷ்பராணி கேட்டார். அதோடு பல நுகர்வோர் குறைதீர்க்கும் அரசு அமைப்புகளுக்கும் இதுகுறித்து புகார் செய்தார். மேலும், வக்கீல் மூலம் விளக்கம் அளிக்க நோட்டீசும் அனுப்பப்பட்டது.

அபராதம்

அதன் பின்னரும் அவருக்கு உரிய பதில் கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மேரி புஷ்பராணி குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் விசாரித்தனர்.

இதைதொடர்ந்து கியாஸ் நிறுவனத்தின் சேவை குறைப்பாட்டினை சுட்டிக்காட்டி ரூ.7,500 அபராதம் விதித்தது. அந்த தொகையை பாதிக்கப்பட்ட மேரி புஷ்பராணிக்கு நஷ்டஈடாக வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது. மேலும், ஏற்கனவே கூடுதலாக வசூலிக்கப்பட்ட ரூ.15 மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.2,500 என மொத்தம் ரூ.10,015-ஐ ஒரு மாத காலத்துக்குள் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments