கரை பகுதியில் மீன்பிடித்ததாக விசைப்படகுகளை சிறைபிடித்த மீனவர்கள் கடல் அட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டது




கரை பகுதியில் மீன்பிடித்ததாக 2 விசைப்படகுகளை, நாட்டுப்படகு மீனவர்கள் சிறைபிடித்தனர். மேலும் கடல் அட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

நாட்டுப்படகு மீனவர்கள்

புதுக்கோட்டை மாவட்டம், கட்டுமாவடியிலிருந்து முத்துகுடா வரை 32 மீனவ கிராமங்கள் உள்ளது. இதில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் நாட்டுப்படகு மீனவர்கள் மீன் பிடிக்கும் பகுதியில் விசைப்படகு மீனவர்கள் தொடர்ந்து மீன் பிடிப்பதாக நாட்டுப்படகு மீனவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.




2 விசைப்படகுகள் சிறைபிடிப்பு

இந்நிலையில் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த ஒரு விசைப்படகும் தொண்டி பகுதியை சேர்ந்த ஒரு விசைப்படகும் கரைப்பகுதியில் அரிவலை மூலம் மீன்பிடித்ததாக கூறி மீமிசல் அருகே உள்ள ஆர்.புதுப்பட்டினம் பகுதியை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் 2 விசைப்படகையும் சிறை பிடித்து கரைக்கு கொண்டு வந்தனர்.

வழக்குப்பதிவு

இதுகுறித்து மீன்வளத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மீன்வளத்துறையினர் மற்றும் கடலோர காவல் குழுமத்தினர் இருதரப்பு மீனவர்களை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

ஆனால் பேச்சுவார்த்தையில் விசைப்படகை ஒரு போதும் விடுவிக்க மாட்டோம் என்று நாட்டுப்படகு மீனவர்கள் திட்டவட்டமாக கூறிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து இருதரப்பு மீனவர்கள் மீதும் திருப்புனவாசல் கடலோர காவல் குழுமத்தினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடல் அட்டைகள் பறிமுதல்

இதற்கிடையே சிறைபிடிக்கப்பட்ட விசைப்படகை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அதில் அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் இருந்தது தெரியவந்தது. இது குறித்து அதிகாரிகள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments