புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் 477 பேர் உயிரிழப்பு சாலை விபத்துகளை தடுப்பது எப்படி? பொதுமக்கள் கருத்து




புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலை விபத்துகளில் அதிகம் உயிரிழப்பு ஏற்படுகிறது. சமீபத்தில் கூட புதுக்கோட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் அரசு டவுன் பஸ் மீது கார் மோதியதில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஒருவர் பலியானார். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஆலங்குடி அருகே ஜல்லிக்கட்டில் பங்கேற்றுவிட்டு காளைகளுடன் சரக்கு வேனில் புறப்பட்டு சென்ற போது திருவரங்குளம் அருகே அரசு பஸ் மோதிய விபத்தில் 4 பேர் பலியாகினர். 2 காளைகளும் செத்தன.

இதேபோல் மாவட்டத்தில் ஆங்காங்கே சாலை விபத்துகள் அதிகரித்தபடி உள்ளன. இதனை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்தந்த போலீஸ் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் இடத்தை கண்டறிந்து, அதில் விபத்தினை தடுக்க இரும்பு தடுப்புகள் அமைத்தல், இரவில் ஒளிரும் வில்லைகள் ஒட்டுதல், விபத்து பகுதி என அடையாளம் குறிக்கும் வகையில் பலகைகள், போக்குவரத்து சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

தேசிய நெடுஞ்சாலை

புதுக்கோட்டை மாவட்டத்தில் திருச்சி-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் மாத்தூர், கீரனூர், நார்த்தமலை, புதுக்கோட்டை அருகே முத்துடையான்பட்டி, காவேரி நகர், லேணா விளக்கு, திருமயம் ஆகிய இடங்களிலும், புதுக்கோட்டை-அன்னவாசல் சாலை, புதுக்கோட்டை-பொன்னமராவதி சாலை, புதுக்கோட்டை- அறந்தாங்கி, ஆலங்குடி சாலை, கட்டுமாவடி கிழக்கு கடற்கரை சாலை, விராலிமலை தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட இடங்களில் சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் என கண்டறியப்பட்டுள்ளன. இதில் விபத்து தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

477 பேர் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை மொத்த 1,725 விபத்துகள் நடைபெற்று உள்ளது. இதில், இருசக்கர வாகனங்கள், கார், பஸ் உள்பட கனரக வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 477 பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல் கடந்த ஓராண்டில் நடைபெற்ற விபத்துகளில் மொத்தம் 1,758 பேர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விபத்தினை தடுக்க போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மாவட்டத்தில் தற்போது 17 இடங்கள் விபத்துகள் அதிகம் நடைபெறும் என கண்டறியப்பட்டு அதில் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் விபத்தை தடுப்பது குறித்து பல்வேறு தரப்பினர் தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு:-

வேகக்கட்டுப்பாட்டு கருவிகள்

கறம்பக்குடி தென்னகர் பகுதியை சேர்ந்த சுரேஷ்:- ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் சாலை விபத்துகள் பெரும் வேதனையை தருகிறது. போக்குவரத்து விதிகளை பின்பற்றாதது, முறையான சாலை கட்டமைப்புகள் இல்லாதது போன்றவை தான் விபத்துகளுக்கு முக்கிய காரணமாக உள்ளன. வேகத்தடைகள் விபத்தை குறைப்பதற்கு மாறாக விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. சீரற்ற நிலையில், எச்சரிக்கை பலகை, வண்ண குறியீடுகள் இல்லாமல் பல இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இருசக்கர வாகனங்களில் சாகசம், அதி வேகம், செல்போன் உபயோகம் போன்றவை விபத்து மற்றும் உயிர் இழப்புகளுக்கு முக்கிய காரணமாக உள்ளன. எனவே மாற்றம் செய்ய முடியாத வண்ணம் இருசக்கர வாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்துவதை கட்டாயமாக்க வேண்டும். வாகன ஓட்டிகளிடம் குறிப்பாக இளைஞர்களின் மனமாற்றம், எச்சரிக்கை, விழிப்புணர்வு போன்றவைதான் விபத்துகளை தடுக்கும்.

கடுமையான தண்டனை

அன்னவாசலை சேர்ந்த போலம்பட்டியை சேர்ந்த பொன்னுச்சாமி:- சாலை விபத்துகளை குறைக்க விதிமுறைகள் குறித்தும், மோட்டார் வாகன சட்டம் குறித்தும், பாதுகாப்பான பயணம் குறித்தும், பெரும்பாலான டிரைவர்களிடம் குறைவான புரிதலே உள்ளது. இதனால் இவர்கள் ஒருமுறை தவறு செய்தால் கூட, அடுத்து திருந்துவதற்கான வாய்ப்பு இல்லாமலேயே சென்றுவிடுகிறது. இதனால், உயிரிழப்புகளை ஏற்படுத்தும் வகையில் விபத்துகளை ஏற்படுத்தும் டிரைவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைத்தால் மட்டுமே, அவர்களுக்கு சாலை விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். அதேவேளையில் எத்தகைய கடுமையான தண்டனை வழங்கப்பட்டாலும், வாகன டிரைவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படாவிட்டால் அதற்கு பலனில்லை. எனவே டிரைவர்களிடமும், பொதுமக்களிடமும் சாலை விதிமுறைகள் குறித்தும், மோட்டார் வாகன சட்டம் குறித்தும் முழுமையான விழிப்புணர்வை ஏற்படுத்தினால் மட்டுமே சாலை விபத்துகளை தடுக்க முடியும்.

மது, செல்போன்...

விராலிமலையை சேர்ந்த கோபிநாதன்:- சமீபகாலமாக இலகு மற்றும் கனரக வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் அதற்கேற்றார் போல் சாலை வசதிகளை ஏற்படுத்தாதது விபத்திற்கு ஒரு காரணியாக அமைகிறது. பெரும்பாலான விபத்துகளுக்கு வாகன டிரைவர்களின் கவனக்குறைவு காரணமாக உள்ளன. ஏனெனில் வாகனத்தை இயக்கும்போது செல்போன் பேசிக்கொண்டு செல்வதும், அதிக வேகத்தில் வாகனத்தை இயக்குவதும் விபத்திற்கு முக்கிய காரணமாக உள்ளன. அது மட்டுமின்றி மதுபோதையில் நிதானமின்றி வாகனம் ஓட்டுபவர்களால் அதிக விபத்துகள் ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.

வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பொதுமக்கள் அனைவரும் போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு சிறு வயது முதலே இந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தொடர்ந்து வாகனத்தை இயக்குவதால் ஏற்படும் சோர்வு காரணமாகவும் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே 2½ மணி நேரத்திற்கு ஒருமுறை சற்று ஓய்வு எடுத்து விட்டு வாகனத்தை ஓட்டினால் நல்லது. அதேபோல் சேதமடையும் சாலைகளை உடனடியாக சரி செய்து தரமான சாலைகளை தருவதற்கு அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடந்தால் மட்டுமே சாலை விபத்துகளை தவிர்க்க முடியும்.

ஹெல்மெட் அணிய வேண்டும்

புதுக்கோட்டை போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் மரிய சாத்தோ திலக்ராஜ்:- சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணம் டிரைவர்களின் கவனக்குறைவு, அதிக வேகம் மற்றும் சாலை விதிகளை மீறுதல் தான். இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும். சாலை விபத்துகளை குறைப்பதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சாலை விதிகளை கடைப்பிடிப்பது குறித்து பிரசாரம் செய்வது, துண்டு பிரசுரம் கொடுப்பது போன்றவை தொடர்ச்சியாக செய்யப்படுகிறது. மேலும் சாலைகளின் நடுவில் தடுப்பு கட்டைகளை அமைப்பதன் மூலம் விபத்துகள் வெகுவாக குறைக்கப்படுகிறது. புதுக்கோட்டையில் உள்ள முக்கிய சலைகளில் இதுபோன்று தடுப்பு கட்டைகள் அமைத்தால் விபத்துகளை வெகுவாக குறைக்கலாம்.

கவனக்குறைவு

புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெய்சங்கர்:- விபத்து ஏற்படுவதற்கு முக்கிய காரணம் டிரைவர்களின் கவனக்குறைவு தான். அனுபவம் மிக்க டிரைவர்களால் தான் அதிக விபத்து ஏற்படுகிறது. இதற்கு காரணம் கவனக்குறைவு மற்றும் அலட்சியம். மேலும் இருசக்கர வாகனங்களில் 3 பேர் செல்லும் போது வளைவுகளில் ஒருவருக்கு ஒருவர் தங்கள் வசதிக்கு ஏற்ப சாயும் போது ஓட்டுபவர்களுக்கு பேலன்ஸ் கிடைப்பதில்லை. இதனால் அதிக விபத்து ஏற்படுகிறது. அதிக வேகத்தில் செல்லும் போது முன்னே செல்லும் வாகனங்கள் பிரேக் அடித்தாலும் பின்னே வரும் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வாகனத்தில் மோதி விபத்து ஏற்படுகிறது. எனவே வாகனம் ஓட்டும்போது கவனமும், சுயக்கட்டுப்பாடும் அவசியமானதாகும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments