தொண்டி - மதுரை - கொச்சி தேசிய நெடுஞ்சாலை திட்டத்தில் (NH 85) உசிலம்பட்டி - போடி 4 வழிச்சாலை தேசிய நெடுஞ்சாலை துறை ஆய்வு




தேனி மாவட்டம் போடியில் இருந்து உசிலம்பட்டி வரை, 64 கி.மீ., துாரத்துக்கு, 700 கோடி ரூபாய் செலவில் நான்கு வழிச்சாலை அமைக்க ஆய்வு செய்யும் பணியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஈடுபட்டுள்ளது.தொண்டி - மதுரை - கொச்சி தேசிய நெடுஞ்சாலை மதுரையிலிருந்து உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி அரசு மருத்துவக் கல்லுாரி, தேனி வழியாக செல்கிறது.


இந்த ரோட்டில் உசிலம்பட்டியில் இருந்து மதுரைக்கு நான்கு வழிச்சாலை அமைந்துள்ளது. இந்தச் சாலையை அகலப்படுத்தும் பணி மேற்கொண்டால் ஆண்டிப்பட்டி, தேனி நகர் பகுதியில் பல கட்டடங்களை அகற்ற வேண்டி வரும். இதனால் நகரப் பகுதிக்குள் வராமல், உசிலம்பட்டியில் இருந்து போடி முந்தல் வரை 64 கி.மீ., துாரத்துக்கு நான்கு வழிச்சாலை அமைக்க ஆய்வுப்பணிகள் நடந்து வருகிறது. தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தற்போது உள்ள தேசிய நெடுஞ்சாலைக்கு இணையாக தெற்குப்பகுதியில் நான்கு வழிச்சாலை அமைக்க திட்டமிட்டுள்ளோம்.

இந்த நான்கு வழிச்சாலை அமைக்க, 700 கோடி ரூபாய் வரை செலவு ஆகலாம். இந்த ரோடு அமைந்தால் போக்குவரத்து எளிதாகும். ஆய்வு முடிய ஒரு ஆண்டுக்கு மேல் ஆகும். சாலை அமைக்கப்பட்ட பின், தேனி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு செல்வோர் எண்ணிக்கை அதிகரிக்கும். தற்போதுள்ள தேனி - உசிலம்பட்டி தேசிய நெடுஞ்சாலை மாநில நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்கப்படும்' என்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments