ராமநாதபுரம் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி மும்முரம் 120 டன் ராட்சத இரும்பு கர்டர்கள் பொருத்தப்பட்டன




ராமநாதபுரம் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி மும்முரமாக நடந்தது. 120 டன் ராட்சத இரும்பு கர்டர்கள் பொருத்தப்பட்டன.

ரெயில்வே மேம்பாலம்

ராமநாதபுரம்-கீழக்கரை சாலை ரெயில்வே கேட் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் அதிக போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதை தடுக்க புதிய சாலை மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. நெடுஞ்சாலைத் துறையின் மூலம் ரெயில்வே சாலை மேம்பாலம் அமைக்க நிலத்திற்கு ரூ.5.14 கோடி, கட்டுமானப்பணிகளுக்கு ரூ.25.60 கோடி என மொத்தம் ரூ.30.74 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த மேம்பாலமானது மொத்தம் 675.56 மீட்டர் நீளத்திலும், 11 மீட்டர் அகலத்திலும் அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல, பாலத்திற்கான அணுகுசாலை இருபுறமும் சேர்த்து மொத்தம் 379 மீட்டர் நீளம் அமைக்கப்படவுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு அடிக்கல் நாட்டி தொடங்கப்பட்ட இந்த பால பணிகள் பல்வேறு காரணங்களினால் தாமதமானது.

பணி மும்முரம்

இதன்பின்னர் மாவட்ட நிர்வாகத்தின் துரித நடவடிக்கையின் பயனாக சாலையின் இருபுறங்களிலும் உள்ள நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. தடையாக இருந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்ட நிலையில் பாலம் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. பழைய பஸ்நிலையம் அருகில் உள்ள பகுதியில் சாலையின் இருபுறமும் பாலத்திற்கான தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு அணுகு சாலை தார்சாலையாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சாலை போடப்பட்டுள்ளதால் பழைய பஸ்நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதுதவிர ரெயில்வே தண்டவாள பகுதியில் இருபுறமும் ரெயில்வே நிர்வாகத்தின் சார்பில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தது.

120 டன் இரும்பு கர்டர்கள்

இந்த ரெயில்வே மேம்பாலத்திற்காக ராட்சத இரும்பு கர்டர்கள் கொண்டுவரப்பட்டு தண்டவாளத்தின் மேல் பொருத்தப்பட்டுள்ளன. திருச்சியில் இருந்து 56½ மீட்டர் நீளமுள்ள தலா 120 டன் எடையுள்ள 8 இரும்பு கர்டர்கள் கொண்டுவரப்பட்டு வரிசையாக ராட்சத கிரேன்கள் மூலம் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த இரும்பு கர்டர்கள் பொருத்தும் பணிகள் முடிவடைந்துள்ளதால் அதன்மேல் மேம்பால கான்கிரீட் இணைப்பு பணிகள் நடைபெற உள்ளன. ஒருபுறம் மேம்பால சாலை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மறுபுறம் ரெயில்வே தண்டவாள மேம்பாலம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருவதால் விரைவில் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments