எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மீனவர்கள் 12 பேர் சிறைபிடிப்பு இலங்கை கடற்படையினர் அட்டூழியம்




எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை விசைப்படகு மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.

விசைப்படகு மீனவர்கள்

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதிகளில் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இதில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருவது வழக்கம். இந்தநிலையில் நேற்று கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

இதில் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த சாம்ராஜ் (வயது 30), பாலா (34), அஜித் (22), துரை (35), சங்கர் (35), பாதுஷா (36), குமார் (50), முருகன் (48), ஜாக்‌சன் (32), நாகசாமி (51), பாலகிருஷ்ணன் (48), ஜெயராஜ் (55) ஆகிய 12 பேர் 3 விசைப்படகுகளில் மீன் பிடிக்க சென்றனர்.

12 பேர் சிறைபிடிப்பு

இவர்கள் நேற்று மாலை நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 3 விசைப்படகுகளில் சென்ற 12 மீனவர்களையும் சிறைபிடித்தனர். மேலும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அவர்களை கைது செய்ததுடன் 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை இலங்கையில் உள்ள காங்கேசன் துறைமுகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து கோட்டைப்பட்டினம் மீனவர் சங்க தலைவர் ஹசன் முகைதீன் கூறியதாவது:-

இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. கடந்த மாதம் தான் இதே பகுதியை சேர்ந்த 13 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் கடந்த வாரம் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் 2 நாட்களுக்கு முன்புதான் ஊர் திரும்பினர்.

விசைப்படகுகளை மீட்க வேண்டும்

இந்தநிலையில் தற்போது 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீண்டும் கைது செய்துள்ளனர். இது கண்டனத்துக்குரிய செயலாகும். இதேபோல் மீனவர்களின் விசைப்படகுகளை இலங்கை அரசு ஜப்தி செய்து வைத்துள்ளது. மீனவர்களின் வாழ்வாதாரம் விசைப்படகை நம்பியே உள்ளன. ஆனால் விசைப்படகை இலங்கை அரசு இதுவரை விடுவிக்கவில்லை. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து கேள்விக்குறியாகிறது. இதுகுறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் விசைப்படகுகளை மீட்க எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

எனவே இந்த விஷயத்தில் மத்திய-மாநில அரசுகள் தலையிட்டு கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களது விசைப்படகுகளை மீட்பதோடு, ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பொங்கல் பண்டிகை நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ள நிலையில் புதுக்கோட்டை மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம் மீனவர்களின் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.





எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments