இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்? மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி




கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 6 மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கடந்த மாதம் 22-ந் தேதி கைது செய்தனர். அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரி, சென்னை ஐகோர்ட்டில் மீனவர் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் பீட்டர் ராயன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட முதல் பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் வக்கீல் மவுரியா ஆஜராகி வாதிட்டார். அவர் தன் வாதத்தில், ‘கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கும்போது இந்தியாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை இலங்கை அரசு மீறி செயல்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின்படி கச்சத்தீவில் மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு உரிமை உள்ளது. ஆனால், கச்சத்தீவு பகுதிக்கு செல்லும் தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்கதையாக இருந்து வருகிறது.

தற்போது 23 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த மீனவர்களை மீட்க தூதரக அளவில் நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். அதேபோல கச்சத்தீவு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண மத்திய, மாநில அரசுகள் இணைந்த கூட்டுக்குழுவை அமைக்கவும் உத்தரவிட வேண்டும்' என்று வாதிட்டார்.

அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், ‘இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்துக்கு நாள் ஒன்றுக்கு ரூ.250 உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது' என்றார்.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான துணை சொலிசிட்டர் ஜெனரல் ராஜேஷ் விவேகானந்தன், ‘மீனவர்களை மீட்க தூதரக அளவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்க அவகாசம் அளிக்க வேண்டும்' என்றார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ‘கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கும் தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர் நிகழ்வாக இருந்து வருவதால் அதை தடுக்க ஏன் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை?' என்று மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினர். பின்னர் இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் விரிவாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 11-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments