கோடைகால பயிர் சாகுபடிக்கான உரங்கள் இருப்பு வைப்பு வேளாண் அதிகாரி தகவல்




கோடைகால பயிர் சாகுபடிக்கான உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண் அதிகாரி தெரிவித்தார்.

உரங்கள் இருப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள கோடை கால நெல், மக்காச்சோளம், உளுந்து, நிலக்கடலை, எள் ஆகிய பயிர்களுக்கும் மற்றும் தென்னை உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்களுக்கும் தேவையான உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

இதில் யூரியா 4,541 டன், டி.ஏ.பி. 845 டன், பொட்டாஷ் 1,191 டன், காம்ப்ளக்ஸ் உரங்கள் 5,196 டன் மற்றும் சூப்பர் பாஸ்பேட் 377 டன் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மொத்த உர விற்பனையாளர்கள் வெளி மாவட்டங்களுக்கு உரங்களை மாற்றம் செய்யக்கூடாது. உரங்களை வெளி மாவட்டங்களிலிருந்து கொள்முதல் செய்யக்கூடாது. உரங்களை அனுப்பும் போது உரிய பட்டியல்கள் மற்றும் ஆவணத்துடன் உரங்களை வாகனங்களில் அனுப்ப வேண்டும்.

உர விற்பனை உரிமம்

சில்லரை உர விற்பனையாளர்கள் விவசாயிகளின் தேவைக்கு அதிகமாக உரம் வழங்கக்கூடாது. ஒரே நபருக்கு அதிகளவு உரம் வழங்கக்கூடாது. குறிப்பிட்ட விவசாயியின் பெயரில் அதிகப்படியாக உர விற்பனை செய்யக்கூடாது. உர விற்பனையாளர்கள் உர அனுமதி பெறாத இடங்களில் உரத்தினை இருப்பு வைக்கக்கூடாது. உரிமத்தில் அனுமதி பெறாத நிறுவனங்களின் உரங்கள் மற்றும் கலப்பு உரங்கள் கொள்முதல் செய்வதும், விற்பனை செய்வதும் கூடாது.விவசாயம் மேற்கொள்ளாத நபர்களுக்கு உரம் விற்பனை செய்யக்கூடாது. உரங்களுடன் விவசாயிகளுக்கு தேவையில்லாத இடுபொருட்களை இணைத்து விற்பனை செய்யக்கூடாது. உரம் இருப்பு மற்றும் விலை விவர பலகை விவசாயிகள் பார்வையில் படும்படி வைக்கப்பட வேண்டும். உரிய பதிவேட்டில் உரம் இருப்பு பராமரிக்கப்பட வேண்டும். விற்பனை முனையக்கருவி (பி.ஓ.எஸ்.) மூலம் மட்டுமே உரம் விற்பனை மேற்கொள்ள வேண்டும்.

நடவடிக்கை

விற்பனை முனையக்கருவி உள்ள இருப்பும், உண்மை இருப்பும் மற்றும் புத்தக இருப்பும் சரியாக இருக்க வேண்டும். உர ஆய்வாளர்கள் மற்றும் உயர் அலுவலர்களின் திடீர் ஆய்வின் போது மேற்காணும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் உர விற்பனை உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். உரங்களுடன் வேறு இடுபொருட்களை இணைத்து விற்பனை செய்தாலோ அல்லது உர மூட்டையின் மேல் அச்சிடப்பட்ட அதிகபட்ச விற்பனை விலைக்கு மேல் விற்பனை செய்யப்பட்டாலோ சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குனரிடம் புகார் தெரிவிக்கலாம். மாவட்ட உர கண்காணிப்பு மையத்தினை 04322 221666 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். மேற்கண்ட தகவலை புதுக்கோட்டை வேளாண் இணை இயக்குனர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments