மீன்பிடி தடைக்காலம் எதிரொலி: கட்டுமாவடி, மணமேல்குடி மார்க்கெட்டுகளில் மீன்கள் விலை உயர்வு




மீன்பிடி தடைக்காலம் எதிரொலியால் கட்டுமாவடி, மணமேல்குடி மீன் மார்க்கெட்டுக்கு மீன்களின் வரத்து குறைந்துள்ளதால் மீன்களின் விலை அதிகரித்துள்ளது.

கட்டுமாவடி மீன் மார்க்கெட்

புதுக்கோட்டை மாவட்டம், கட்டுமாவடியில் பெரிய மீன் மார்க்கெட் உள்ளது. இங்கு மட்டும் 15-க்கும் மேற்பட்ட மீன் ஏலக்கடைகள் செயல்படுகின்றன. இந்த மீன் மார்க்கெட்டிற்கு கட்டுமாவடி, மணமேல்குடி, பொன்னகரம், புதுக்குடி, சேதுபாவாசத்திரம், மந்திரிப்பட்டினம் போன்ற பகுதிகளில் நாட்டுப்படகில் பிடிக்கப்படும் மீன்களும், கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மல்லிப்பட்டினம் போன்ற பகுதிகளில் விசைப்படகுகள் மூலம் பிடிக்கப்படும் மீன்களும் விற்பனைக்கு வருகின்றன.

அதுமட்டுமில்லாமல் பாம்பன், ராமேசுவரம், தூத்துக்குடி, நாகப்பட்டினம், காரைக்கால் போன்ற பகுதிகளிலிருந்து சரக்கு வேன்கள் மூலம் தினமும் மீன்கள் விற்பனைக்கு வருகின்றன. இந்த மீன்களை வாங்குவதற்கு திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை போன்ற பல்வேறு பகுதிகளிலிருந்து மீன் வியாபாரிகள் சரக்கு வேன்களில் தினமும் வந்து செல்கின்றனர்.

மீன்பிடி தடைக்காலம்

ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய நாட்களில் விசைப்படகு மீனவர்கள் கரை திரும்புவதால் மீன்வரத்து அதிகமாக இருக்கும். இந்த நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்கள் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆழ் கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு 45 நாட்களாக இருந்த மீன்பிடி தடைக்காலம் 61 நாட்களாக உயர்த்தப்பட்டது. இந்த மீன்பிடி தடைக்காலத்தில் ஆழ்கடலில் மடிவலை மற்றும் இழுவை வலை மூலம் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மீன்கள் விலை உயர்வு

ஆனால் குறைந்த ஆழத்தில் கரையோரங்களில் மீன்பிடிக்கலாம். இதனால் மீனவர்கள் நண்டு வலை, முரல் வலை, பட்டி வலைகள் மூலம் மீன் பிடித்து வருகின்றனர். இதனால் கட்டுமாவடி, மணமேல்குடி மீன் மார்க்கெட்டுக்கு குறைந்த ஆழத்தில் பிடிக்கப்படும் மீன்கள் மட்டுமே விற்பனைக்கு வருவதால் மீன்களின் வரத்து குறைந்து மீன்களின் விலை அதிகரித்துள்ளது.

ஒரு கிலோ இறால் ரூ.350-லிருந்து ரூ.450-க்கும், கலிங்க முரல் கிலோ ரூ.350-லிருந்து ரூ.500-க்கும், வாடுமுரல் ரூ.260-லிருந்து ரூ.350-க்கும், நண்டு ரூ.350-லிருந்து ரூ.550-க்கும், செங்கனி மீன் ரூ.450-லிருந்து ரூ.550-க்கும், காளை மீன் ரூ.550-லிருந்து ரூ.700-க்கும், கொடுவா மீன் ரூ.550-லிருந்து ரூ.700-க்கும், ஜிலேபி மீன் ரூ.30-லிருந்து ரூ.70-க்கும் விலை உயர்ந்துள்ளது.

இதேபோல் அனைத்து வகையான மீன்களும் ரூ.100-லிருந்து ரூ.300 வரை விலை உயர்ந்துள்ளது. மீன்பிடி தடைக்காலம் முடிந்த பிறகே மீன்களின் விலை குறையும். மீன்களின் விலை உயர்வால் மீன் பிரியர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

© 2024 All Ri
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments