காரங்காடு சூழல் சுற்றுலா மையம் பகுதியில் கடலில் தவறி விழுந்த தங்கச்சங்கிலி மீட்பு




தொண்டி அருகே காரங்காடு கிராமத்தில் வனத்துறை சார்பில் சமூகம் சார்ந்த சூழல் சுற்றுலா மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு வனத்துறை சூழல் சுற்றுலா மையம் சார்பில் கடலில் படகு சவாரி இயக்கப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களாக கடலில் சீற்றத்தின் காரணமாக சுற்றுலா படகுகள் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் காரங்காடு சூழல் சுற்றுலா மையத்தில் கழிமுகப்பகுதியில் பெரிய அளவில் சீற்றம் இல்லாததால் இங்கு படகு போக்குவரத்து இயக்கப்பட்டது.

நேற்று முன்தினம் இங்கு படகு சவாரி செய்வதற்காக கோவையைச் சேர்ந்த அந்தோணி என்பவரது குடும்பத்தினர் 9 பேர் வந்துள்ளனர். இவர்கள் வனத்துறை படகில் கடலுக்குள் படகு சவாரி சென்று, ஆழம் குறைவான பகுதியில் சுற்றுலா பயணிகளை கடலில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது அதில் ஒருவர் கழுத்தில் அணிந்து இருந்த 2 பவுன் தங்கச்சங்கிலி கடலில் தவறி விழுந்தது. உடனே பதற்றமடைந்த அனைவரும், கடலில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. இதனால் கரைக்கு திரும்பிய சுற்றுலா பயணிகள், சூழல் சுற்றுலா மைய பணியாளர்களிடம் தங்களது செல்போன் நம்பரை கொடுத்து தங்கச்சங்கிலி கிடைத்தால் தகவல் கொடுக்குமாறு கூறிச் சென்றனர். இந்தநிலையில் நேற்று படகு ஓட்டுனர் அந்தோணி தாஸ் மற்றும் சிலர் கோவையைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் குளித்த இடத்தில் கடலுக்குள் இறங்கி தேடி, கடலுக்குள் தவறவிட்ட தங்கச்சங்கிலியை கண்டெடுத்து வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

 அதனைத் தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் கோவையைச் சேர்ந்த சுற்றுலா பயணி அந்தோணிக்கு தகவல் தெரிவித்து, சூழல் சுற்றுலா மையத்தில் உள்ள படகு துறையில் வனத்துறை வனவர் நவீன், வனக்காப்பாளர் செல்வராகவன், சூழல் சுற்றுலா மையப் பணியாளர் ஜெரால்டு மேரி ஆகியோர் தங்கச் செயினை உரியவர்களிடம் ஒப்படைத்தனர். அவர்கள் வனத்துறையினருக்கும் அதிகாரிகளுக்கும் தங்கச்சங்கிலியை கண்டுபிடித்துக் கொடுத்த படகு ஓட்டுனர் அந்தோணி தாசை பாராட்டினர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments