ஜூன் 6-ந்தேதி பள்ளிகள் திறப்பு: மாணவர்கள் பாதுகாப்பாக படிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்




கோடை விடுமுறைக்கு பிறகு அடுத்த மாதம் 6-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், வகுப்பறைகள் தூய்மையாக இருப்பதையும், மாணவர்கள் பாதுகாப்பாக படிக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளவும் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகளும், ஆண்டு இறுதித் தேர்வுகளும் நிறைவடைந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கிடையில், தமிழகத்தில் 2024-25-ம் கல்வியாண்டில் 1 முதல் பிளஸ்-2 வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 6-ந்தேதி (வியாழக்கிழமை) பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில், 2024-25-ம் கல்வியாண்டில் பள்ளிகள் திறப்பதற்கு முன்பு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், கல்வி செயல்பாடுகள், கல்வி இணை செயல்பாடுகள், கல்விசாரா செயல்பாடுகள் சார்ந்த வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்விவரம் பின்வருமாறு:-

வகுப்பறை தூய்மை

* பள்ளியில் அனைத்து வகுப்பறைகள், தலைமை ஆசிரியர் அறை, ஆய்வகம், கழிப்பறை உள்ளிட்ட பிற அறைகள், வளாகங்கள் நன்கு தூய்மைபடுத்தப்பட்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

* கற்றல், கற்பித்தல் உபகரணங்கள் ஆகியவை நன்கு தூய்மைப்படுத்தப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். காலாவதியான ஆய்வக பொருட்களை முறைப்படி பதிவேட்டில் பதிவு செய்து நீக்கம் செய்ய வேண்டும்.

* பள்ளி கட்டிடத்தின் மேற்பரப்பில் சேர்ந்துள்ள குப்பைகளை அகற்றி, மழைநீர் வடிந்து ஓடுவதற்கான பாதை சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

* மாணவர் பயன்பாட்டிற்கான குடிநீர் தொட்டி, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அனைத்தையும் உட்புறம் கிருமி நாசினி கொண்டு நன்கு சுத்தம் செய்து, தூய்மையாகவும், பாதுகாப்பான குடிநீர் மாணவர்களுக்கு கிடைக்கும் வகையில் உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

* திறந்தவெளிக் கிணறுகள் இருந்தால் அதன் மேற்பரப்பினை யாரும் அணுகாத வகையில் மூட நடவடிக்கை எடுத்து, பள்ளி தொடங்குவதற்கு முன்பாகவே இந்த நடவடிக்கைகளை நிறைவு செய்ய வேண்டும். கழிவு நீர் தொட்டிகள் மூடப்பட்டு, பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

* அனைத்து குழந்தைகளும் பாதுகாப்பாக படிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

* பள்ளி வளாகத்தில் பழுதடைந்த கட்டிடங்கள், உடைந்து விழும் நிலையில் சுற்றுச்சுவர் ஏதாவது இருந்தால் அந்த கட்டிடங்களை மாணவர்கள் அணுகாத வகையில் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

* பள்ளியில் உள்ள அனைத்து மின்சாதனங்கள், மின்சுவிட்சுகள் நல்ல முறையில் செயல்படுகின்றதா என்பதை தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மூலம் உறுதி செய்ய வேண்டும்.

* பள்ளி வளாகத்தில் உள்ள மரங்களில் ஒடிந்த கிளைகள் மற்றும் கட்டிடங்களுக்கு இடையூறாக அமைந்துள்ள கிளைகளை அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மரங்கள் எளிதில் விழாத வகையில் உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

* அனைத்து அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களை ஒவ்வொரு மாதமும், பள்ளிக்கு அழைத்து, மாணவர்கள் வருகை, உடல் நலம், மனநலம், கற்றல் அடைவு, விளையாட்டு உள்ளிட்ட பள்ளியின் அனைத்து நிகழ்வுகள் குறித்து எடுத்து கூற வேண்டும்.

தரமான காலை உணவு

* 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் இலக்கிய மன்றம், சுற்றுச்சூழல் மன்றம் உள்ளிட்ட பல்வேறு மன்றங்கள், கலை செயல்பாடுகளில் கலந்து கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.

* ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை, காலை வணக்க கூட்டத்தில் 6 முதல் பிளஸ்-2 வரையிலான மாணவர்களுக்கு போதை எதிர்ப்பு சார்ந்த தகவல்கள், கருத்து பரிமாற்றம் சார்ந்த பேச்சு, கவிதை, சுவரொட்டி, நாடகம், பாட்டு, திறக்குறள் கதைகள் இடம் பெறலாம்.

* ‘முதல்-அமைச்சர் காலை உணவுத் திட்டம்' அனைத்து குழந்தைகளுக்கும் குறித்த நேரத்திலும், தரமானதாகவும் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

* வாரத்துக்கு ஒரு நாள் மாணவர்களின் மனநலன் சார்ந்து தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments