புதுக்கோட்டை மாவட்டத்தில் 9-ந் தேதி நடக்கிறது: குரூப்-4 தேர்வை 45,355 பேர் எழுதுகின்றனர்




புதுக்கோட்டை மாவட்டத்தில் வருகிற 9-ந் தேதி குரூப்-4 தேர்வை 45,355 பேர் எழுதுகின்றனர்.

166 மையங்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-4 -ன் கொள்குறி வகைத்தேர்வு வருகிற 9-ந் தேதி 166 மையங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்வை 45,355 தேர்வர்கள் எழுதவுள்ளனர்.

குரூப்-4 தேர்வர்கள் தேர்வினை எழுத ஏதுவாக அனைத்து தேர்வு மையங்களிலும் சுகாதாரமான இட வசதி, சுத்தமான குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள், வெளிச்சம், மின்வசதி மற்றும் மாவட்டத்திலுள்ள அனைத்து தாலுகா பஸ் நிலையத்திலிருந்து தேர்வு கூடங்களுக்கு செல்ல போதிய பஸ் வசதி போன்ற அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பறக்கும் படை

ஒவ்வொரு தேர்வு மையங்களுக்கும் ஒருவர் வீதம் 166 முதன்மை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேற்படி தேர்வு தொடர்பான பணிகளை முழுமையாக கண்காணிக்கும் பொருட்டு தாலுகாவிற்கு ஒருவர் வீதம் 12 துணை கலெக்டர் நிலையிலான அலுவலர்கள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் தேர்வு நாளன்று தேர்வு கண்காணிப்பு பணிக்காக துணை கலெக்டர் நிலையில் 15 பறக்கும் படை குழுக்கள் மற்றும் வினாத்தாள், விடைத்தாள்களை தேர்வு மையங்களுக்கு எடுத்து செல்ல 35 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து தேர்வு மையங்களின் பாதுகாப்பு பணிக்காக போலீசார் நியமிக்கப்படுகின்றனர். தேர்வு நடவடிக்கைகளை பதிவு செய்ய ஏதுவாக வீடியோ பதிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அடையாள அட்டை

மேற்படி தேர்வு மையங்களில் தேர்வு எழுதுவோர் செல்போன், கால்குலேட்டர் மற்றும் மின்னணு கெடிகாரம் போன்ற எவ்வித மின்னணு சாதனங்களும் கொண்டு செல்ல அனுமதியில்லை. தேர்வு கூடத்திற்கு வரும் தேர்வர்கள் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை (ஆதார், பான், போன்ற) கட்டாயமாக எடுத்து வர வேண்டும்.

மேலும், தேர்வர்கள் தேர்வு நாளன்று காலை 8.30 முதல் 9 மணிக்குள் தேர்வு கூடத்திற்கு வரவேண்டும். மேற்படி நேரத்தை கடந்து வரும் தேர்வர்கள் கண்டிப்பாக உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேற்படி தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12.30 மணிக்கு நிறைவு பெறும். மேற்கண்ட தகவலை கலெக்டர் மெர்சிரம்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments