புதுக்கோட்டையை சுற்றியுள்ள ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைப்பதை கண்டித்து 8 இடங்களில் பொதுமக்கள் மறியல்




புதுக்கோட்டையை சுற்றியுள்ள ஊராட்சிகளை புதுக்கோட்டை மாநகராட்சியுடன் இணைப்பதை கண்டித்து 8 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

11 ஊராட்சிகளை இணைக்க...

புதுக்கோட்டை நகராட்சியை தரம் உயர்த்தி மாநகராட்சியாக மாற்ற தமிழக அரசு அறிவித்தது. அதை தொடர்ந்து புதுக்கோட்டை மாநகராட்சியோடு வாகவாசல், தேக்காட்டூர், முல்லூர், திருக்கட்டளை, திருமலைராய சமுத்திரம் உள்ளிட்ட 11 ஊராட்சிகளை இணைப்பதற்கும் அரசாணை வெளியிட்டுள்ளது.

இதற்கு பல ஊராட்சிகள் புதுக்கோட்டை மாநகராட்சியோடு தங்களது ஊராட்சிகளை இணைக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக மாநகராட்சியோடு இணைத்தால் 100 நாள் வேலை திட்டம் பறிபோகும். சொத்து வரி, தொழில்வரி, தண்ணீர் வரி உள்ளிட்ட வரிகள் உயரும் அபாயம் உள்ளது. எனவே ஊராட்சிகளை மாநகராட்சியோடு இணைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சாலை மறியல்

இந்த நிலையில், புதுக்கோட்டை மாநகராட்சி மக்கள் கூட்டமைப்பின் சார்பில் அண்ணா சிலை அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த புதுக்கோட்டை போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து அழைத்து சென்றனர். புதுக்கோட்டையில் திருவப்பூர் ரெயில்வே கேட், கருவேப்பிள்ளையான் கேட், அரிமளம் சாலை, முள்ளூர், மேட்டுப்பட்டி, வெள்ளனூர், நமணசமுத்திரம் உள்பட 8 இடங்களில் சாலை மறியல் நடைபெற்றது. அப்போது புதுக்கோட்டை மாநகராட்சியோடு தங்களது ஊராட்சிகளை இணைக்க கூடாது என்று கண்டன கோஷங்களை எழுப்பினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments