ஜூலை மாதம் பெறாதவர்களுக்கு ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் இந்த மாதம் வழங்கப்படும் தமிழ்நாடு அரசு அறிவிப்பு




ரேஷன் கடைகளில் ஜூலை மாதம் பருப்பு, பாமாயில் பெறாதவர்கள் இந்த மாதம் பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.

சட்டமன்றத்தில் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு சிறப்புப் பொது வினியோகத் திட்டத்தின் வாயிலாக 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் தோறும் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.30-க்கும், ஒரு லிட்டர் பாமாயில் ரூ.25-க்கும் மானிய விலையில் வழங்கி வருகிறது.

ஜூன் 2024-ம் மாத துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டினை பெற இயலாத ரேஷன் அட்டைதாரர்கள் ஜூலை 2024-ம் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என சட்டமன்றத்தில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டது.

ஆகஸ்டு மாதத்தில் பெறலாம்

அதன் அடிப்படையில் ஜூன் 2024-ம் மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற முடியாதவர்கள் வசதிக்காக ஜூலை 2024-ம் மாதத்தில் நியாய விலைக் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற்றுக் கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டது.

இருப்பினும், ஜூலை 2024-ம் மாதத்தில் சிறப்பு பொது வினியோகத்திட்டப் பொருட்கள் முழுமையாக நகர்வு செய்யப்படாத காரணத்தினால் குடும்ப அட்டைதாரர்களால் ஜூலை 2024-ம் மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் முழுமையாக பெற இயலவில்லை.

ஆதலால், குடும்ப அட்டைதாரர்களின் நன்மையினைக் கருத்தில் கொண்டு ஜூலை 2024-ம் மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட் பெற இயலாத ரேஷன் அட்டைதாரர்கள் ஆகஸ்டு 2024-ம் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments