பணியின்போது அரசு ஊழியர்கள் அடையாள அட்டை அணிவது கட்டாயம் மனிதவள மேலாண்மை துறை அறிவுறுத்தல் மீறுபவர்கள் மீது பொதுமக்கள் புகார் அளிக்கலாம்




பணியின்போது அரசு ஊழியர்கள் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அணிவது கட்டாயம், மீறுபவர்கள் மீது பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என மனிதவள மேலாண்மை துறை அறிவுறுத்தி உள்ளது.

ஐகோர்ட்டு உத்தரவு

1986-ம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த அரசாணையின்படி, அரசு ஊழியர்கள் தங்களது பணி நேரத்தின்போது பெயர் பட்டையை அணிந்திருக்க வேண்டும் என்ற உத்தரவு நடைமுறையில் இருந்து வந்தது. அதன்பிறகு, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்ட பிறகு, பழைய நடைமுறை கைவிடப்பட்டது.

ஆனாலும், அரசு ஊழியர்கள் பலர் பணியின்போது அடையாள அட்டை அணிவது இல்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வந்தது. இந்த நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் 16-ந் தேதி சென்னை ஐகோர்ட்டு உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.

60 நாட்களுக்குள் வழங்க வேண்டும்

அந்த உத்தரவில், “தமிழக அரசின் அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள் குறிப்பாக, பொதுமக்களிடம் நேரடியாக பணியாற்றும் ஊழியர்களுக்கு 60 நாட்களுக்குள் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை வழங்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.

மேலும், “அடையாள அட்டை அணிவது தொடர்பாக ஏற்கனவே அரசு விதி இருந்தால் அந்த விதியை மிகவும் கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும். விதியை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் உத்தரவிட்டு இருந்தது.

அடையாள அட்டை கட்டாயம்

அதன்பிறகு, பணி நேரத்தில் அரசு ஊழியர்கள் அடையாள அட்டை அணிவது கட்டாயம் என தமிழக அரசு உத்தரவிட்டதுடன், அதை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தது. உத்தரவை மீறுவோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு பணியாளர் நலன் மற்றும் சீர்திருத்தத் துறை உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில், கடந்த 3-ந் தேதி மனிதவள மேலாண்மை துறையின் அரசு சார்பு செயலாளர் அ.செ.ராஜன், மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் நிறுவன பொதுச் செயலாளர் என்.எஸ்.செல்வராஜூக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:-

ஒழுங்கு நடவடிக்கை

அரசு ஊழியர்கள் அனைவரும் அலுவலக நேரத்தில் தவறாமல் புகைப்பட அடையாள அட்டையை அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி அனைத்துத் துறைகளின் தலைவர்களுக்கும் அரசு அவ்வப்போது ஆணைகள் அறிவுறுத்தங்களைப் பிறப்பித்து வருகிறது.

மேலும், அரசுக் கடித எண் 5550 ஏ 2/2020-1 பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்த துறை நாள் 19-2-2020-ல் அடையாள அட்டை அணிவது தொடர்பான அறிவுறுத்தங்கள் மீண்டும் வலியுறுத்தப்பட்டு உள்ளன.

அவ்வரசுக் கடிதத்தில் அனைத்துத் துறைத் தலைவர்கள் மாவட்ட கலெக்டர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கீழ்நிலை அலுவலகங்களுக்கு அரசு ஆணைகள் அறிவுறுத்தங்களின்படி, பணியாளர்கள், புகைப்பட அடையாள அட்டையைத் தவறாமல் அணியுமாறு அறிவுறுத்தியும், அவ்வாறு புகைப்பட அடையாள அட்டைகளை அணியாதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

எனவே, இவ்வரசாணை அறிவுரைகள் பின்பற்றப்படாத நேர்வுகளில், பொதுமக்கள் தகுந்த நடவடிக்கை மற்றும் தீர்வுக்காக அலுவலகத் தலைவர் அல்லது சம்பந்தப்பட்ட அலுவலக துறைத் தலைவர் ஆகியோரை அணுகி தீர்வு பெறலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments