வங்கக் கடலில் 23-ந்தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது 25-ந்தேதி முதல் தீவிரம் அடையும் வடகிழக்கு பருவமழை




வங்கக்கடலில் வருகிற 23-ந்தேதி (சனிக்கிழமை) காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது எனவும், 25-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் பருவமழை தீவிரம் அடைய இருக்கிறது எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் (அக்டோபர்) 15-ந்தேதி தொடங்கினாலும், முதல் சுற்று மழை ஏமாற்றத்தை கொடுத்தது. அதன் பின்னர் பருவமழையின் இடைவெளி ஏற்பட்டு, இம்மாதம் முதல் வாரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியது. இந்த தாழ்வுப் பகுதியால் மழைக்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக சொல்லப்பட்டு, அந்த மழையும் ஏமாற்றியது.

2-வது சுற்றுக்கான மழையாக இது பார்க்கப்பட்ட நிலையில் பெரிய அளவில் மழை கொடுக்கவில்லை. ஆனால் கிழக்கு திசை காற்றின் காரணமாக கடந்த ஒரு வாரமாக மழை தமிழ்நாட்டில் பெய்து வருகிறது. எதிர்பார்த்த மழை கைவிட்ட நிலையில், கிழக்கு திசை காற்றினால் தெற்கு, டெல்டா, மேற்கு, உள் மற்றும் வட மாவட்டங்களில் மழை பெய்தது.

காற்றழுத்த தாழ்வுப் பகுதி

இதனைத் தொடர்ந்து பருவமழையில் மீண்டும் ஒரு சிறிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று (புதன்கிழமை) முதல் 23-ந்தேதி (சனிக்கிழமை) வரை மழைக்கான வாய்ப்பு குறைவு. இந்த காலகட்டங்களில் பனிப்பொழிவு இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகிறது. இதனைத் தொடர்ந்து 23-ந்தேதி தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும்.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கு அடுத்த 2 நாட்களில் தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு இருக்கிறது.

தீவிரம் அடையும்

இதன் காரணமாக தமிழ்நாட்டில் வருகிற 25-ந்தேதி முதல் (திங்கட்கிழமை) வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 25-ந்தேதி கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments