கோரிக்கைகளை நிறைவேற்றாத அரசை கண்டித்து கோபாலப்பட்டிணத்தில் இன்று மீண்டும் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்: பதாகைகள் வைத்து அறவழிப் போராட்டத்தில் ஈடுபட ஜமாஅத் அழைப்பு!




புதுக்கோட்டை மாவட்டம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணம் கிராமத்தில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள மக்கள் நலக் கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறிய அரசு மற்றும் அதிகாரிகளைக் கண்டிக்கும் விதமாக, இன்று (16-04-2026) மீண்டும் தேர்தல் புறக்கணிப்புப் போராட்டத்தை முன்னெடுக்க ஜமாஅத் நிர்வாகம் மற்றும் ஊர் பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.

கோபாலப்பட்டிணம் கிராமத்தின் அடிப்படை வசதிகள் மற்றும் பல்வேறு மக்கள் நலக் கோரிக்கைகள் குறித்துப் பல ஆண்டுகளாக மனுக்கள் அளித்தும், சாலை மறியல் மற்றும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடத்தியும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. குறிப்பாக, குப்பை கிடங்கு அமைப்பது தொடர்பான மதுரை உயர்நீதிமன்றத் தீர்ப்பை அதிகாரிகள் மதிக்காதது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக, கடந்த 03-04-2026 வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்குப் பிறகு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், "தேர்தல் புறக்கணிப்பு" செய்வது என்று ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.


சமரசப் பேச்சுவார்த்தை தோல்வி
இதனைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி அரசு அதிகாரிகள் முன்னிலையில் இருமுறை சமரசப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அதிகாரிகளின் நிபந்தனைகளில் உடன்பாடு ஏற்படாத நிலையில், ஒரு வார கால அவகாசம் கோரப்பட்டதால் தேர்தல் புறக்கணிப்புத் திட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

அறவழிப் போராட்டம்
அதிகாரிகளின் வாக்குறுதிகள் வெறும் "பசப்பு வார்த்தைகளாக" மட்டுமே இருப்பதை உணர்ந்த ஜமாஅத் நிர்வாகம் மற்றும் கோபாலப்பட்டிணம் ஊர் பொதுமக்கள், மீண்டும் போராட்டக் களத்தில் இறங்கத் தீர்மானித்துள்ளனர்.

அதன்படி, இன்று 16-04-2026 (வியாழக்கிழமை) நண்பகல் 12 மணியளவில், ஊரின் நுழைவு வாயில்களில் "தேர்தல் புறக்கணிப்பு" தொடர்பான கண்டனப் பதாகைகளை (Banners) வைத்து தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்ய உள்ளனர். இந்த அறவழிப் போராட்டத்தில் ஊர் பொதுமக்கள் அனைவரும் பெருந்திரலாகக் கலந்து கொண்டு தங்களது உரிமைக் குரலை எழுப்ப வேண்டும் என ஜமாஅத் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments