புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் சேர மாணவ- மாணவிகள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்





புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் சேர மாணவ- மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

77 விடுதிகள்

தமிழ்நாடு அரசால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நல மாணவ, மாணவிகளுக்கென 41 மாணவர்கள், 16 மாணவிகள் பள்ளி விடுதிகளும், 11 மாணவர்கள், 9 மாணவிகள் கல்லூரி விடுதிகளும் என மொத்தம் 77 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பள்ளி விடுதிகளில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவ- மாணவிகளும், கல்லூரி விடுதிகளில் பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஐ.டி.ஐ. மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவ- மாணவிகள் சேரத் தகுதியுடையவர்கள் ஆவர்.

விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல் அனைத்து விடுதி மாணவ- மாணவிகளுக்கு 3 வேளை உணவு மற்றும் தங்கும் வசதியும் அளிக்கப்படும், 4-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மாணவ - மாணவிகளுக்கு 4 இணை சீருடைகள் தைத்து வழங்கப்படும். 10-ம் வகுப்பு மற்றும் 12- ம் வகுப்பு பயிலும் மாணவ- மாணவிகளுக்கு கல்வி திறனை மேம்படுத்தும் பொருட்டு நீட், ஜே.இ.இ., நுழைவுத் தேர்வுக்கான வினா வங்கி நூல்கள், சிறப்பு வழிகாட்டிகள் உள்ளிட்ட நூல்கள் வழங்கப்படும். இந்த விடுதிகளில் சேர பெற்றோர் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சம் மிகாமல் இருக்க வேண்டும்.

8 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும்

இருப்பிடத்தில் இருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவிகளுக்கு பொருந்தாது. தகுதியுடைய மாணவ - மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகள் இடமிருந்தோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இருந்தோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் அல்லது பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வருகிற 18-ந்தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் அடுத்த மாதம் (ஜூலை) 15-ந் தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும்.

மாணவ - மாணவிகள் விண்ணப்பிக்கும் பொழுது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் ஏதும் அளிக்க தேவையில்லை. விடுதியில் சேரும் போது மட்டும் சான்றிதழ்களை அளித்தால் போதுமானது. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் அரசின் இந்த சலுகைகளை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இந்த தகவலை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
 

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments